டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் அறிவிப்பு: பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது!

17 பங்குனி 2025 திங்கள் 20:49 | பார்வைகள் : 1256
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.
கடந்த 6 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 17) ரூ. ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்ட பா.ஜ., தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழிசை கைது
இதற்கிடையே, சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.,வினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பா.ஜ., மாநில செயலாளர்கள் வினாத் செல்வம், அஸ்வத்தாமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடுகளின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாமலை கேள்வி
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.
தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?. இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கைது
பேட்டி அளித்து விட்டு போராட்டத்துக்கு புறப்பட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
போராட்டம் தொடரும்
இது குறித்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாவது: தி.மு.க., அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பா.ஜ., சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம் முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை.
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதல்வர் ஸ்டாலின் தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.