Paristamil Navigation Paristamil advert login

அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிக்கப்பட்டது ஏன்? சபாநாயகர் விளக்கம்

அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிக்கப்பட்டது ஏன்? சபாநாயகர் விளக்கம்

19 பங்குனி 2025 புதன் 11:07 | பார்வைகள் : 386


பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, இந்தச் சபையிலும் சபைக்கு வெளியிலும் குறிப்பாக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனி நபர்களுக்கும், தனி நபர் குழுக்களுக்கும் மற்றும் பலதரப்பட்ட அமைப்புகளுக்கும் எதிராக மிகவும் இழிவான சொற்பதங்களைப்  பிரயோகித்து மேற்கொண்டுள்ளதும் மேற்கொண்டு வருவதுமான சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுக்குட்படுத்தும் கூற்றுகளால், தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்களுக்கும் பல்வேறு சமூக மற்றும் இனக் குழுமங்களுக்கும்  மன அமைதியை குலைக்கும் நிலை ஏற்படுகின்றதென பல்வேறு வழிமுறைகளில் எனக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து இந்தச் சபைக்கு தெளிவுப்படுத்த விரும்புவதாகத் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பின் போது, விடுக்கப்பட்ட இந்த அறிவிப்பு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

 உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, தனிப்பட்ட முறையில் பெண்கள் உட்பட பல்வேறு நபர்கள், பல்வேறு சமூக குழுக்கள் மற்றும் சமயக் குழுக்களை இலக்கு வைத்து முன்வைத்துள்ள பல்தரப்பட்ட, இழிவுக்குட்படுத்துகின்றதும் அநாகரிகமானதும் அத்தோடு கடுமையான சர்ச்சைகளுக்கு வித்திடுகின்றதுமான கூற்றுகள் சம்பந்தமாக பல்வேறு நபர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் அதேபோல், இந்தச் சீருயர் சபையை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்க கட்சியையும் எதிர்க்கட்சியையும்  சேர்ந்த பல மக்கள் பிரதிநிதிகள் உட்பட்ட பல்வேறு தரப்பினர் தனிப்பட்ட முறையில் என்னிடம் முறைப்பாடு செய்து அத்தகைய கூற்றுகள் சம்பந்தமாக அவர்களினது கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, இந்தச் சீருயர் சபையின் தலைவர் என்ற வகையில் அத்தகைய செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள் எனும் விடயத்தை இச்சபைக்கு அறியத்தர விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இந்தச் சீருயர் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்குரிய சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி,  இந்தச் சபைக்கு வந்து பதிலளிக்க முடியாத தரப்பினர் சம்பந்தமாகவும் இச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தமாகவும் அத்துடன் பிற பல்வேறு வெளிமட்ட சமூக மற்றும் சமய அமைப்புகள் உட்பட பல்வேறு இனக் குழுமங்களையும் இனப் பிரிவினரையும் இலக்கு வைத்து மிகவும் இழிவான சொற்பதங்களைப் பிரயோகித்து, அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றதும் அபகீர்த்தியை விளைவிக்கின்றதுமான கூற்றுகளுக்கு சபாநாயகர் என்ற வகையில் தனது கடுமையான அதிருப்தியை  தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சீருயர் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அவர் மேற்கொள்கின்ற இவ்வகையான இழிவுபடுத்தும் மற்றும் அநாகரிகமான கூற்றுகளால் சபையின் சீருயர் தன்மைக்கு பாரிய களங்கமும் அவமதிப்பும் ஏற்படுகிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். மேலும், இது தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாரிய குந்தக நிலையை ஏற்படுத்துகின்றது என்பதையும் குறிப்பிட விரும்புவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில், இவ்வாறான கூற்றுகளைத் தவிர்க்குமாறு பல வழிகளில் கடிந்துரைத்தபோதிலும், அந்த அறிவுறுத்தல்களை ஏற்று நடப்பதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் முற்றாகத் தவறியிருப்பதனையும் நான்  அவதானிக்கின்றேன். 

குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் இத்தகைய செயற்பாடுகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகள், பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின்  ஏற்பாடுகள் மற்றும் தொன்றுதொட்டு பேணப்பட்டு வருகின்ற தொன்மையான பாராளுமன்ற மரபுகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணாகவும் இசைந்தொழுகாத வகையிலும் இருக்கின்றதென இங்கு விசேடமாக வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்  (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இக்கூற்றுக்கள் தொடர்பாக மிக ஆழமாக ஆராய்ந்து,  அவற்றை பரிசீலித்ததன் பின்னர் அதன் மூலம் தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, நிலையியற் கட்டளை ஏற்பாடுகளின் பிரகாரம், சபாநாயகர் என்ற வகையில் எனக்களிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2025ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 மற்றும் 21ஆந் திகதிகளிலும், 2025ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 08, 09 மற்றும் 10ஆந் திகதிகளிலும், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 06, 07 மற்றும் 08ஆந் திகதிகளிலும் என மொத்தமாக எட்டு (08) நாட்கள் நடைபெற உள்ள பாராளுமன்ற அமர்வுகளின்போது, பாராளுமன்ற உறுப்பினர்  (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் எந்தவொரு கூற்றையும் செவிப்புல, கட்புல மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி / ஒளிபரப்புச் செய்வதை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கட்டளையிட்டார்.

மேலும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, அவ்வாறான இழிவுக்குட்படுத்தும், அநாகரிகமான மற்றும் கீழ்த்தரமான சொற்பதங்களைப் பிரயோகித்து, கௌரவ உறுப்பினரால் தெரிவிக்கப்படும் அனைத்து கூற்றுக்களையும் ஹன்சாட் அறிக்கையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இந்தச் சீருயர் சபைக்கு அறியத்தர  விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறு நேரடி ஒலி / ஒளிபரப்பை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலப்பகுதியில்,  உறுப்பினர் ஆற்றும் உரைகளின் உள்ளடக்கம் மற்றும் தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்து, இத்தற்காலிக தடையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்