Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அனல் மின் நிலையங்களில் 2,040 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

அனல் மின் நிலையங்களில் 2,040 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

21 பங்குனி 2025 வெள்ளி 14:17 | பார்வைகள் : 2632


கோடையில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின் வாரிய அனல் மின் நிலையங்களில், 2,040 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சேலம், துாத்துக்குடி மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.

அவை, கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறப்பாக செயல்படுகின்றன. அனல் மின் நிலையங்களில், தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்; கோடை காலத்தில், 4,100 மெகா வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த கோடையிலும், அனல் மின் நிலையங்களில், அதிக மின் உற்பத்தி செய்ய, கடந்த மழை காலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, வெயில் சுட்டெரிப்பதால் மின் தேவை, 16,000 மெகா வாட்டில் இருந்து, 18,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், திருவள்ளூர் வடசென்னை விரிவாக்க அனல்மின் நிலையத்தில், 'டர்பைன் வைப்ரேஷன்' பழுது காரணமாக, இம்மாதம், 1ம் தேதி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.


அங்கு பழுதை சரி செய்து, 12ம் தேதி மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதுவரை, மின் உற்பத்தி துவங்கவில்லை.

சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 600 மெகா வாட் திறன் உடைய அலகில், 'பாய்லர் பியூட் பஞ்சர்' காரணமாக, இம்மாதம், 17ல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே, 'கோல் பங்கர்' இடிந்து விழுந்ததில், 2024 டிச., 19 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட, மேட்டூர் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் மூன்றாவது அலகில், இன்னும் உற்பத்தி துவக்கப்படவில்லை.

துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தலா 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக மின் வாரியத்தின், சொந்த அனல் மின் நிலையங்களில், 2,040 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 2,000 மெகா வாட் வரை தான், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க, தனியாரிடம் கூடுதல் மின்சாரம் வாங்கப்படுகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக, 260 மெகா வாட் வழங்கப்பட்டுள்ளது;

'மேலும் மின்சாரம் தருவதாக உறுதி அளித்துள்ளது; எனவே, அனல்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், தேவையான மின்சாரம் கிடைக்கிறது. அனல் மின் நிலைய பழுதுகளை சரி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்