Paristamil Navigation Paristamil advert login

பழனிசாமி பேசும் போது மைக்... துண்டிப்பு : ஸ்டாலினுடன் மோதல்

பழனிசாமி பேசும் போது மைக்... துண்டிப்பு : ஸ்டாலினுடன் மோதல்

21 பங்குனி 2025 வெள்ளி 18:21 | பார்வைகள் : 1749


தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலைகள் குறித்து, நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி காரசாரமாக கேள்விகள் எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழனிசாமி தொடர்ந்து பேச முடியாத வகையில், அவருக்கான, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைக் கண்டித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் துவங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ''பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்,'' என, சபாநாயகரை பார்த்து அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி தர தயங்கிய சபாநாயகர், ''காலை சபை துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே, நீங்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, ''அனுமதி தரக்கூடாது,'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறிய நிலையில், முதல்வர் குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கும்படி கூறினார்.

இதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:

பழனிசாமி: மதுரை, பெருங்குடி அருகே சிவகங்கையை சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கோவை மதுக்கரையில், ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

ஈரோடு நசியனுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, தம்பதி கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே மடபுரத்தில், கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக் கொல்லட்டுள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று முதல்வர் சொன்ன தினமே, நான்கு கொலைகள் நடந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின்: நீங்கள் எது வேண்டுமானாலும் பேசுங்கள்; அதற்கான ஆதாரங்களை நான் தருகிறேன்.

சபாநாயகர் அப்பாவு: அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து பேச, எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உள்ளது. நீங்கள் நான்கு குற்றச்சாட்டுகளை கூறி விட்டீர்கள். அதை பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு தான்; சொல்லி முடியுங்கள்.

அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுவதில் தவறில்லை. என்ன நடந்தது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் போது, அரசு மீது குற்றம் சாட்டுகிறார். அரசின் நடவடிக்கை என்ன என்று தான் அவர் கேட்க வேண்டும்.

பழனிசாமி: அன்றாட நிகழ்வாக தொடர்ந்து நடக்கிறது. ஒருநாள் நடந்தால் பரவாயில்லை.

திருநெல்வேலி கொலை சம்பவத்தை பற்றி முதல்வர் நேற்று சொன்னார். அன்றே நான்கு கொலைகள் நடந்துள்ளன. இது, மக்களின் உயிர் பிரச்னை. பேசித்தான் ஆக வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தவர். என்ன நடந்தது என்று கேட்டால், அதற்கான பதிலை முதல்வர் சொல்வார். பொதுவான குற்றச்சாட்டை சொல்லும் போது, அது சரியாக வராது. தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.

முதல்வர் ஸ்டாலின்: துாத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் பற்றி நான் சொல்லட்டுமா? விதிமுறைக்கு உட்பட்டு விளக்கம் அளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

சபாநாயகர்: எதிர்க்கட்சித் தலைவர் உட்காருங்கள். முதல்வர் பேசும் போது எழுந்து நின்று பேசுவது, எந்த வகையில் நியாயம்; நீங்கள் பேசுவது சபை குறிப்பில் இடம்பெறாது.

முதல்வர் ஸ்டாலின்: சம்பவம் நடக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது தான் கேள்வி. உங்களை போல, 'டிவி'யை பார்த்து தெரிந்து கொண்டதாக சொல்லவில்லை.

இவ்வாறு முதல்வர் பேசியதற்கு, பதில் அளிக்க பழனிசாமி முயற்சித்தபோது, அவரது, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து, 'எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு மைக் கொடுங்கள்' என கோஷம் போட்டபடியே வெளிநடப்பு செய்தனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின், ''தைரியம் இருந்தால், நான் சொல்லும் விளக்கத்தை அமர்ந்து கேட்டுவிட்டு செல்லுங்கள்,'' என்றார். ஆனால், சபையில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

 ஆனால் கொலைகள் குறைவுதான்'

''சில கொலை குற்றங்கள் நடக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் போது, அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடப்பது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, சில கருத்துகளை, எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கில் சொல்லி விட்டு சென்றிருக்கிறார். காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த பின் எடுக்கப்படும் துரித நடவடிக்கைகள்; குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என, இரண்டு வகையிலும் காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது.

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் கூலிப்படையினர் கண்காணிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, 2023ம் ஆண்டு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள், 49,280 ஆக இருந்த நிலையில், 2024ல் 31,498 ஆக குறைந்துள்ளன.ஒரே ஆண்டில், 17,782 குற்றங்களை குறைத்திருக்கிறோம். சில கொலை குற்றங்கள் நடக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் போது, அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடப்பது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில் எண்ணிக்கை அளவில் பார்க்கும் போது, 2024ம் ஆண்டில் கொலை குற்றங்கள், 6.8 சதவீதம் குறைந்துள்ளன. அதாவது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது, 109 கொலைகள் குறைந்துள்ளன. அதேபோல, பழிக்கு பழிவாங்கும் கொலைகளின் எண்ணிக்கை, 2024ம் ஆண்டு 42.7 சதவீதம் குறைந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில், அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு, 181 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் வாயிலாக தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 2024ம் ஆண்டில் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல் 2024 வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கையை ஆண்டு வாரியாக ஒப்பிட்டு பார்க்கும் போது, அ.தி.மு.க., ஆட்சியில், 2012ல் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943 ஆக இருந்தது. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கை. கடந்த 2013ம் ஆண்டு, 1,927 கொலைகள் நடந்துள்ளன. கொரோனா காலத்தில், ஊரடங்கு இருந்தபோதும், அ.தி.மு.க., ஆட்சியில், 2020ம் ஆண்டு 1,661 கொலைகள் நடந்துள்ளன. தற்போது காவல் துறையின் கடுமையான நடவடிக்கை காரணமாக, 2024ம் ஆண்டு மிக குறைவான எண்ணிக்கையில் 1,540 கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. இவ்வாறு முதல்வர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்