Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க கல்வித்துறையை கலைத்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க கல்வித்துறையை கலைத்த அதிபர் டிரம்ப்

21 பங்குனி 2025 வெள்ளி 14:23 | பார்வைகள் : 733


அமெரிக்கா கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கா அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவின் நிதி சுமையை குறைக்கவே, இதில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று அமெரிக்க அரசின் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்க கல்வித் துறையின் கீழ், சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகளும், 34,000 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

கல்விக் கொள்கையை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மானியம் வழங்குவது ஆகியவற்றை இந்தத் துறை கவனித்து வருகிறது.

இந்தப் பள்ளிகளின் 85 சதவீத செலவுகளை, மாகாண அரசுகள் தான் செய்கின்றன. ஆனால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கான கடன்தொகை ஆகியவற்றை மத்திய கல்வித் துறை கவனித்து வருகிறது.

இதனால் ட்ரில்லியன் கணக்கில் மத்திய கல்வித் துறைக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இனி இந்த பள்ளிகளின் நிர்வாகத்தை மாகாண அரசுகளே மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார்.

அதே வேளையில், பெல் மானியங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஹெட் I நிதி போன்ற முக்கிய திட்டங்கள் மாகாண நிர்வாகத்தின் கீழ் அப்படியே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், கல்வித்துறையை சேர்ந்த 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். தற்போது கல்வித்துறையை கவனித்து கலைத்ததற்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜனநாயகக் கட்சி கல்வித்துறை மூலம், மதவாத, பயங்கரவாத, கம்யூனிச கொள்கைகள் புகுத்தப்படுவதாக, டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார்.

இது குறித்து பேசிய டிரம்ப், "இன்று வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். 45 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நடவடிக்கை. கல்வித் துறையைக் கலைப்பது குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நன்மை சேர்க்கும்.

கல்வியை நாம் மாகாண அரசுகளின் வசம் ஒப்படைக்கிறோம். உலகநாடுகளை ஒப்பிடும் போது அமெரிக்கா கல்விக்கு அதிக செலவு செய்கிறது. கல்வித் துறையின் செலவு மட்டும் 600 சதவீதமாக அதிகரித்துள்ளது.

8ஆம் நிலை கல்வி பயிலும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வாசிக்கத் தெரியவில்லை. கணித அறிவு இல்லை" என தெரிவித்துள்ளார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்