தென் கொரியாவில் காட்டுத்தீ - 4 பேர் பலி ; அவசரகாலநிலை பிரகடனம்

23 பங்குனி 2025 ஞாயிறு 12:48 | பார்வைகள் : 248
தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்யுள்ளமையால் அந்நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி தெற்கு தென் கொரியாவில் தெற்கு சான்சியோங் கவுண்டி உள்ளிட்ட மூன்று வெவ்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு வரை 25 சதவீதம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொரிய வனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 847 ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. சான்சியோங்கில் வசிக்கும் சுமார் 260 பேர் வெளியேறியுள்ளனர்.
தென்கிழக்கு நகரமான உல்சானிலும் அருகிலுள்ள கியோங்சாங் மாகாணத்திலும் சுமார் 620 குடியிருப்பாளர்கள் சனிக்கிழமை வெளியேறியுள்ளதாக தென்கொரிய உள்நாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தென் கொரியா தெற்குப் பகுதிகளில் அனர்த்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, சான்சியோங் பகுதி விசேட அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.