அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்!

26 பங்குனி 2025 புதன் 08:38 | பார்வைகள் : 2672
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க தேர்தல் விதிகளை இன்னும் கடுமையாக்கும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய உத்தரவின் கீழ், இனி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க குடியுரிமைச் சான்று கட்டாயமாக்கப்படுகிறது.
தேர்தல் நாளுக்கு முன்பே வாக்குச் சீட்டுகளை பெறும் முறையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருக்கின்றன.
முன்னாள் அமெரிக்க அரசாங்கங்கள் தேர்தல் பாதுகாப்பில் பின்தங்கியதாக குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி டிரம்ப், மாநிலங்கள் இத்தகைய புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசு நிதி நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதேவேளை டிரம்ப் இன் இந்த உத்தரவு சட்டப்பூர்வமான சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும், ஏனெனில் தேர்தல் விதிகளை அமைப்பதில் மாநிலங்களுக்கு பெரும் அதிகாரம் உள்ளது என்றும் மாநிலங்கள் கூறுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் முறைகள் குறித்தே சந்தேகங்களை எழுப்பி வந்தார். குறிப்பாக, 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தனது தோல்விக்கு தேர்தல் முறைகேடே காரணம் என அவர் தெரிவித்திருந்தார்.
குடியுரிமை இல்லாமல் வாக்களிப்பது இனி முற்றிலும் சட்டவிரோதமாகும், மேலும் சட்டத்தை மீறுவோருக்கு நாடுகடத்தும் தண்டனை கூட இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவால பல்வேறு உரிமைக் குழுக்கள், அமெரிக்க தேர்தலில் வாக்களிப்பதற்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படலாம் என கவலை தெரிவித்துள்ளன.