அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் இணையும் பாலிவுட் நடிகை ?

1 சித்திரை 2025 செவ்வாய் 15:38 | பார்வைகள் : 291
இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டதை தொடர்ந்து பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தையும் இயக்கி புதிய வரலாறு படைத்தார். இதைத் தொடர்ந்து இவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்ப ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. பின்னர் அப்படம் கைவிடப்பட்டதாகவும், அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை இயக்கப் போவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன
அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அல்லு அர்ஜுன் இப்படத்தில் இரட்டை வேடங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கப் போகிறார் என்று பல தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகை பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பிரியங்கா சோப்ரா தற்போது ராஜமௌலியின் புதிய படத்தில் நடித்து வருகிறார். எனவே அவருடைய சம்பளம், கால்ஷீட் ஆகியவற்றைப் பொறுத்து பிரியங்கா சோப்ரா இப்படத்தில் நடிக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.