தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கு அச்சுறுத்தல்: ஸ்டாலின்

5 பங்குனி 2025 புதன் 22:44 | பார்வைகள் : 155
தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் அது தமிழகத்துக்கு கிடைக்கிற அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் அவர் பேசிய உரையின் விவரம்: தமிழகம் மிகப்பெரிய உரிமை போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்த்துவதற்காக தான் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கிறது.
இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. இன்று தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கும் அபாயம் இப்போது நெருங்கிக் கொண்டு இருக்கிறது. மத்திய அரசு 2026ம் ஆண்டில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறு சீரமைப்பு செய்ய உள்ளது. பொதுவாக இதை, மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வர்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது நாட்டின் மிக முக்கியமான இலக்கு. இந்த இலக்கில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிக்கரமான குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன் முயற்சிகள் மூலம் நாம் இதை சாதித்துள்ளோம்.
இப்போது இருக்கும் 543 லோக்சபா தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள் தொகை குறைவாக இருப்பதினால், நம்முடைய தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழகம் மொத்தமாக 8 லோக்சபா இடங்களை இழக்கும் என்று சொல்கின்றனர். இப்போது இருக்கும் 39 தொகுதி எம்.பி.,க்கள் கிடைக்க மாட்டார்கள்.
லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையில், மறு சீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும்.
ஆனால் தற்போதுள்ள மக்கள் தொகையின் படி மறு சீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த 2 முறைகளிலுமே நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிகம் தொகுதிகள் கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இது வெறும் வெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய கவலை இல்லை. இது தமிழகத்தின் உரிமை சார்ந்த கவலை. தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னையில் எல்லா அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லாம் முன்னிலையிலும் நான் வைக்கிறேன்.
அனைத்துக் கட்சிகளும் கட்சி எல்லைகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்தால் அது தமிழகத்தின் மக்கள் பிரதிநிதித்துவத்தை எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா, ராஜ்ய சபா இடங்கள், சட்டசபை தொகுதிகள் குறையும் என்று சொல்வது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாக தான் அமையும்.
இதை முன்கூட்டியே உணர்ந்து கடந்தாண்டு பிப்.14ம் தேதி தமிழக சட்டசபையில் நாம் தீர்மானத்தை நிறைவேற்றினோம். தமிழகத்தின் உரிமை, கூட்டாட்சி கருத்தியலின் கோட்பாடு தமிழக பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக்கூடாது என தீர்க்கமாக, திடமாக அப்போது நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.
இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தென்னிந்தியாவுக்கு அபாயமான செயல். இதில் நமக்குள்ளே கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நினைக்கிறேன். இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.
இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தின், தமிழகத்துக்கு கிடைக்கிற அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்.
இப்படி ஒரு சமநீதியற்ற, அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழகத்தின் குரல் நெறிக்கப்படும். தமிழகத்தின் நலன் மற்றும் தமிழக மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில் மாநிலத்தில் இருக்கக்கூடிய பலம் குறைக்கப்படும்.
39 எம்.பி.,க்கள் இருக்கும் போது, நாம் எழுப்ப இருக்கிற குரலையே மத்திய அரசு ஏற்க மறுக்கிற நிலையில் இந்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ அது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட, அழிக்கமுடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்து பார்க்க வேண்டும். எனவே நம்முடைய நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுக்க வேண்டும்.
வர இருக்கும், இல்லை என்றால் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக, ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். எனவே உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.