பல் மருத்துவமனையில் மோசடி.. பற்களை பிடுங்க €9,000 யூரோக்களை இழந்த பெண்!!

5 பங்குனி 2025 புதன் 12:00 | பார்வைகள் : 3030
பரிசில் உள்ள குறைந்த கட்டண பற்சிகிச்சை நிலையமான Dentexia இல் இடம்பெற்ற மோசடியில் பெண் ஒருவர் €9,000 யூரோக்களை இழந்துள்ளார்.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் Saint-Lazare நிலையத்துக்கு அருகே உள்ள குறித்த Dentexia பற்சிகிச்சை நிலையத்தில் மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண் பற்சிகிச்சை மேற்கொண்டுள்ளார். வீதி விபத்தில் சிக்கிய அப்பெண் தனது மூன்று பற்களை இழக்க நேர்ந்தது. ஆனால் குறித்த சிகிச்சை மையத்தில் வாயின் மேற்பகுதியில் உள்ள அனைத்து பற்களை பிடுங்கப்பட்டதாகவும், அதற்காக அவரிடம் இருந்து €9,000 யூரோக்களை கட்டணமாக அறவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தினை பகுதி பகுதியா செலுத்தி மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், இன்னமும் அதில் 4,000 யூரோக்கள் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி சிகிச்சை கடந்த 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகவும், கிட்டத்தட்ட 8 வருடங்களை தாண்டியும் அந்த பாதிப்பில் இருந்து வெளிவரவில்லை எனவும் மேரி தெரிவித்தார்.
அதேவேளை, பற்களை செயற்கை முறையில் மீள பொருத்துவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எடுக்கும் எனவும், அதற்குள்ளா X-Ray, ஸ்கேன் போன்ற செயற்பாடுகளுக்காக தினமும் பணத்தை இழப்பதாகவும், மொத்த பற்களையும் பொருத்தி முடிப்பதற்கு கிட்டத்தட்ட 30,000 யூரோக்கள் வரை செலவாகும் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
மிகவும் நூதன முறையில் இடம்பெறும் இந்த கொள்ளையினால் தாம் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், இதில் இருந்து மீள வழி தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகம் (ministère de la Santé ) வெளியிட்ட அறிக்கையில், இந்த Dentexia மையம் மீது கிட்டத்தட்ட 1,800 பேர் இதுபோல் நூதன முறையில் பாதிக்கப்பட்டதாகவும், 1,589 பேர் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.