பெண்கள் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தடை விதித்த பரிஸ் காவல்துறை!!

6 பங்குனி 2025 வியாழன் 10:00 | பார்வைகள் : 419
நாளை பரிசில் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த பெண்கள் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு பரிஸ் காவல்துறை தடை விதித்துள்ளது.
’பொது சட்ட ஒழுங்கு சீர்குலையும் ஆபத்து’ இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடையை விதிப்பதாக காவல்துறை தலைமையதிகாரி Laurent Nuñez தெரிவித்தார். Gare de l'Est தொடக்கம் Place de l'Hôtel de Ville வரை இடம்பெற இருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் Samidoun மற்றும் Urgence Palestine போன்ற அமைப்புகள் பங்கேற்க இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
’பிரான்ஸ் பாசிச அரசால் அச்சுறுத்தப்படும் உரிமைகள் மற்றும் சுதந்திரம் மறுக்கப்படும் நாடாக மாறியுள்ளது. தீவிர வலதுசாரி சிந்தனைகள் மட்டும் தலைதூக்கியுள்ளது!’ என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்தனர்.
"nocturne féministe radicale" (தீவிர பெண்ணிய இரவு) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் பாலஸ்தீன ஆதரவாளர்கள் இணைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.