Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது

இலங்கையில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது

6 பங்குனி 2025 வியாழன் 09:04 | பார்வைகள் : 197


உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றுடன் புதன்கிழமை (05) அன்று இருவர் கைது செய்யப்பட்டதாக  பதுளை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கியை வைத்திருந்த  மஹியங்கனை, 40 ஆம் இலக்க தொழில்துறை காலனியை சேர்ந்த 61 வயதுடைய  ஒருவர் மற்றும்  துப்பாக்கியை தயாரித்ததாக கூறப்படும் பதியதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரு​மே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  மஹியங்கனை தொழில்துறை கொலனி பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது  சந்தேக நபரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  துப்பாக்கி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த துப்பாக்கியை பதியதலாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தயாரித்தமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய துப்பாக்கியை தயாரித்த சந்தேக நபர், பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாடும் துப்பாக்கிகள் தான் தயாரிப்பதாகவும், யூடியூப் தளத்தில் இருந்த ஒரு காணொளியை பார்த்து குறித்த துப்பாக்கியை தயாரித்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, மேலதிக விசாரணைகளுக்காக மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  இரு சந்தேக நபர்களும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்