Paristamil Navigation Paristamil advert login

கடமையை நிறைவேற்றாதவரை அதிகாரத்தை கேட்க முடியாது; ராகுல் பேச்சு

கடமையை நிறைவேற்றாதவரை அதிகாரத்தை கேட்க முடியாது; ராகுல் பேச்சு

10 பங்குனி 2025 திங்கள் 08:10 | பார்வைகள் : 122


நமது கடமையை நிறைவேற்றாத வரை அதிகாரத்தை தாருங்கள் என நாம் மக்களிடம் கேட்க முடியாது, '' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது . நான் இங்கு வரும்போது எல்லாம் 2007, 2012, 2017, 2022ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து ஆலோசனை நடப்பதை பார்க்கிறேன். ஆனால் எனது கேள்வி தேர்தல் முடிவு பற்றி அல்ல.

உறுதி

நமது கடமையை நிறைவேற்றாத வரை குஜராத் மக்கள் நம்மை வெற்றி பெறச் செய்ய மாட்டார்கள். நமது கடமையை நிறைவேற்றாமல் அதிகாரத்தை கொடுக்க வேண்டுமென மக்களிடம் நாம் கேட்க முடியாது. இதனைச் செய்யும் நாளன்று குஜராத் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு உறுதியளிக்கிறேன்.

நம்ப மாட்டார்கள்

குஜராத் மாநில காங்கிரஸ் தலைமை, தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவினர் மக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக போராடுகின்றனர். மக்களை மதிப்பதுடன், கட்சியின் கொள்கைகளை மனதில் தாங்கி நிற்கின்றனர். மற்றொரு பிரிவினர், மக்களிடம் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மக்களை அவர்கள் மதிப்பது கிடையாது. அவர்களில் பாதி பேர் பா.ஜ.,வில் இணைந்துவி டுகின்றனர். இந்த இரண்டு பேரை நாம் தனித்து அடையாளம் காணாத வரையில், குஜராத் மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள்.

குஜராத்தை சேர்ந்தவர்

ஆங்கிலேயர்களை எதிர்க்க காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேவைப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் ஏராளமானோர் இருந்தாலும் தலைவர் என யாரும் இல்லை. ஆனால் அந்த தலைவர் தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்தார். அந்த தலைவர் மகாத்மா காந்தி. அவரை நமக்கு கொடுத்தது யார்? தென் ஆப்ரிக்கா கொடுக்கவில்லை. அவரை குஜராத் மாநிலம் தான் காங்கிரஸ் கட்சிக்கு அளித்தது.மஹாத்மா காந்தி தான் நமக்கு, சிந்திக்கும் திறனையும், போராட்டத்திற்கான வலிமையையும் கொடுத்தார்.

மஹாத்மா காந்தி இல்லாமல் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் கட்சி போராட இருக்க முடியாது. குஜராத் இல்லாமல் காந்தி நமக்கு கிடைக்க மாட்டார். காங்கிரசில் உள்ள ஐந்து பெரிய தலைவர்கள் இரண்டு பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்.

இங்கு எதிர்க்கட்சிகளுக்கு 40 சதவீத ஓட்டுகள் உள்ளன. நாம் வெற்றி பெற 5 சதவீத ஓட்டுகளை தான் அதிகரிக்க வேண்டும். தெலுங்கானாவில் 22 சதவீதம் ஓட்டுகளை அதிகரிக்கும் போது, இங்கு அதனை செய்ய முடியாதா. இங்கும் அதனை செய்யலாம். ஆனால்,கட்சியை சீரமைக்காமல் அதனை செய்ய முடியாது.

காந்தி, படேல் கற்றுத்தந்த சித்தாந்தத்திற்கு காங்., திரும்ப வேண்டும் காங்கிரசுக்கு அடிப்படை தலைமையைக் கொடுத்தது குஜராத். குஜராத்தில் இப்போது தொழில், வணிகம், வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சியினர் மக்களிடம் சென்று குறைகளைக் கேட்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்