தமிழக சட்டசபையில் அதிமுக - பாஜ., வெளிநடப்பு

14 பங்குனி 2025 வெள்ளி 08:46 | பார்வைகள் : 246
2025- 2026 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று ( மார்ச் 14) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சபை துவங்கியதும் டாஸ்மாக் மதுபானத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அதிமுக, பா.ஜ., எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: எத்தகைய சோதனைகள் வந்தாலும் இரு மொழி கொள்கையை விட்டு தர மாட்டோம். இந்தியாவின் 2வது மிக பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது எதிர்கால வளர்ச்சிக்கான பட்ஜெட் ஆகும். இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. பல்வேறு துறைகளில் மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது. இருமொழி கொள்கையால் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். திருக்குறள் மொழி பெயர்ப்பு உயர்த்தப்படும். புத்தக கண்காட்சி வெளிநாடுகளிலும் நடத்தப்படும்.
தொல்லியல் ஆய்வுக்கென ரூ. 7 கோடி ஒதுக்கப்படும்.
சிவகங்கை- கீழடி, சேலம்- தெலுங்கனூர், கோவை- வெள்ளலூர், கள்ளக்குறிச்சி- ஆதிச்சனூர், கடலூர்- மணிக்கொல்லை, தென்காசி- கரிவலம்வந்தநல்லூர், தூத்துக்குடி- பட்டணமருதூர், நாகப்பட்டினம் பகுதிகளில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும்.
* இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு
* மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிக்கு ரூ.600 கோடி
* 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும்
* ராமநாதபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* வேளச்சேரி - கிண்டி வரை மேம்பாலம் அமைக்கப்படும்
* மகளிர் உரிமை தொகை புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு
* மகளிர் உரிமை தொகை 13, 870 கோடி ஒதுக்கீடு
* இலவசமாக 5 லட்சம் மகளிர் நாள்தோறும் பஸ் பயணம்
* நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ. 3,700 கோடி ஒதுக்கீடு
* ரூ. 120 கோடியில் கிராம சாலைகள் சீரமைக்க திட்டம்
* ரூ. 3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்
* சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்
* ஓசூரில் ரூ. 400 கோடியில் டைடல் பூங்கா
* ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
* விருதுநகர், கடலூர், புதுக்கோட்டையில் தொழில் பூங்கா
* 1,125 மின்சார பஸ்கள் வாங்கப்படும்; அமைச்சர்
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால் ரூ. 10 லட்சம் பரிசு
*செமி கண்டக்டர் திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி
இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
எதிர்கட்சிகள் வெளிநடப்பு ;
சபை துவங்கியதும், அதிமுக மற்றும் பா.ஜ., வினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். இதனை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., வினர் வெளிநடப்பு செய்தனர்.