சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்தது இந்தியா; பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி

24 சித்திரை 2125 செவ்வாய் 16:32 | பார்வைகள் : 101
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம் உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பாகிஸ்தானை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான வலுவான ராஜதந்திர மற்றும் ஐந்து முக்கிய எதிர் நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு துறை அறிக்கை:
சிந்து நதி நீர் ஒத்துழைப்பை நிறுத்தி வைத்தல்:
சிந்து நதி, கிளை நதிகளில் இருந்து ஆண்டுதோறும் 39 பில்லியன் கன மீட்டர் நீர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர் பகிர்வை நிர்வகிக்கும் இந்த ஒப்பந்தம், பல ஆண்டுகளாக நீடித்த மோதல்களுக்கு மத்தியிலும் கூட ஒத்துழைப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அட்டாரி-வாகா எல்லை மூடல்:
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புக்கு ஒரு முக்கியமான புள்ளியான சின்னமான அட்டாரி-வாகா எல்லை மூடல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு தடை:
பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவுக்குள் நுழைவது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் விசா சேவைகள் மற்றும் எல்லை தாண்டிய பயண அனுமதிகள் இரண்டும் அடங்கும்.
ராணுவ ஆலோசகர்களை வெளியேற்றுதல்:
புது டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து ராணுவ ஆலோசகர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்,
துாதரக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்:
புது டில்லியில் தனது ராஜதந்திர இருப்பை 55 லிருந்து 30 ஆகக் குறைக்குமாறு இந்தியா, பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து நாளை அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு வெளியுறவு துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.