காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியீடு

24 சித்திரை 2025 வியாழன் 17:13 | பார்வைகள் : 100
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மேலும் சம்பவ இடத்தில் அமித்ஷா ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 3 பேரின் வரையப்பட்ட படங்களை ஜம்மு - காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதனிடையே அஷிப் பவுஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோர் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தம் 6 பேர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், 3 பேரின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.