Paristamil Navigation Paristamil advert login

பாக்., பயங்கரவாதத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம்

பாக்., பயங்கரவாதத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம்

26 சித்திரை 2025 சனி 13:45 | பார்வைகள் : 291


இதயங்களில் ரத்தம் கசிகிறது

''பஹல்காம் தாக்குதல் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. பயங்கரவாதிகளின் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது,'' என்று ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வைஸ் பரூக் கூறினார்.

அவர் கூறியதாவது: காஷ்மீர் படுகொலைகள் எங்கள் இதயங்களை துளைத்துள்ளன. படுகொலைக்கு முன், அப்பாவி மக்களிடம், முதலில் அவர்களின் மத அடையாளங்கள் குறித்து கேட்டுள்ளனர். பின்னர், குடும்பத்தினர் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். இது நம்பமுடியாத செயல். இதை ஒருவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தங்கள் சொந்தங்களை இழக்கும் வலியை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்துள்ளனர். அவர்களை விட யார் இந்த துயரத்தை புரிந்துகொள்வார்கள்? கொல்லப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களின் வலியை எங்களை விட யார் அதிகம் உணர முடியும்? இந்த சம்பவத்தால் எங்கள் இதயங்களில் இரத்தம் கசிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்பாவிகளை கொல்வது பாவம்


டில்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அஹ்மது புகாரி, நேற்று தனது வெள்ளிக்கிழமை உரையின் போது பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.

அவர் கூறுகையில், ''அப்பாவிகளைக் கொல்வது பாவம். இஸ்லாம் மதத்தின் பெயரால் இதுபோன்ற செயல்களை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. சமீபத்திய வகுப்புவாத வன்முறைகள் கவலை அளிப்பதாக உள்ளன. எந்தவொரு பிரச்னைக்கும் பயங்கரவாதம் தீர்வாகாது,'' என்றார்.

மதம் கேட்டு கொலை: வெறுப்பு சம்பவம்


பஹல்காம் படுகொலை குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சையது ஷாநவாஸ் உசேன் கூறியதாவது: மத்தியில் பா.ஜ., அரசு வந்த பின், காஷ்மீரில் அமைதி ஏற்பட்டு சுற்றுலா வளர்ச்சி பெற்று வந்தது. இதற்கு முடிவுகட்ட மிகப்பெரிய சதி நடக்கிறது. சுற்றுலா பயணியரை படுகொலை செய்வதற்கு முன், நீங்கள் எந்த மதம் என கேட்ட விதம், மிகப்பெரிய வெறுப்பு சம்பவமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. பயங்கரவாதிகளின் எண்ணத்தை இந்திய மக்களும், அரசும் முறியடிப்பார்கள்.

பயங்கரவாதத்துக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக நமது நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும். இதனால் அந்நாடு பயந்து நடுங்குகிறது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடியை இந்தியா தந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சிறப்பு துவா


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, லக்னோ ஈத்கா இமாம் மவுலானா காலித் ரஷீத் பரங்கி மஹ்லி கூறியதாவது:

நமது நாட்டில் இருந்தும், உலகம் முழுவதிலும் இருந்தும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்ய அனைத்து மசூதிகள் மற்றும் இமாம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவையொட்டி, பயங்கரவாதத்தை ஒழிக்க சிறப்பு துவா ஏற்பாடு செய்ய அனைத்து மசூதிகள் மற்றும் இமாம்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்