இலங்கை ஸ்டைல்ல பலாக்காய் கிரேவி…

7 சித்திரை 2025 திங்கள் 13:15 | பார்வைகள் : 141
சம்மர் வந்தாச்சு... கூடவே மாம்பழம், பலாப்பழம், தர்பூசணி பழம், முலாம்பழம் ஆகியவற்றின் சீசனும் வந்தாச்சு. முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் நாவிற்கு இனிமையான சுவையோடு இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பலாக்காய் பற்றி தெரிவதில்லை. பலாப்பழம் கனிவதற்கு முன்பு கிடைக்கக்கூடிய பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இந்த பதிவில் இலங்கை ஸ்டைலில் பலாக்காய் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இது சப்பாத்தி, பூரி, வெள்ளை சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
நறுக்கிய பலாக்காய் - 250 கிராம்
மஞ்சள் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 கப்
இலங்கை கறி மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
சீரகம் - 3 டேபிள் ஸ்பூன்
வர மல்லி - 4 - 5 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பாஸ்மதி அரிசி - 1.5 - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 4
சோம்பு - 2 டீஸ்பூன்
கிராம்பு - 10
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
பட்டை - ஒரு இன்ச் (2 துண்டு)
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10
பட்டை - ஒரு இன்ச்
இஞ்சி பூண்டு விழுது - 1.5 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
இலங்கை கறி மசாலா - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மல்லி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய்ப்பால் - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
முதலில் மல்லி விதைகள், சீரகம், மிளகு, பாஸ்மதி அரிசி, பச்சை ஏலக்காய், சோம்பு, கிராம்பு மற்றும் கடுகு ஆகியவற்றை வாசனை வரும் வரை எண்ணெய் ஊற்றாமல் ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
இந்த வறுத்த மசாலா பொருட்களை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கிய பலாக்காய், மஞ்சள் பொடி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பலாக்காய் நன்றாக வேக காத்திருக்கவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பட்டை, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள இலங்கை கறிமசால் பொடியை சேர்த்து அதனுடன் மஞ்சள் பொடி, மல்லி பொடி, உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றவும்.
பொருட்கள் அனைத்தையும் நன்றாக கிளறி கொள்ளுங்கள்.
இப்போது நாம் வேக வைத்துள்ள பலாக்காயை சேர்த்து கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கிரேவி 10 முதல் 15 நிமிடங்கள் வேகட்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.