நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது; ஸ்டாலினுக்கு இ.பி.எஸ். பதிலடி

12 சித்திரை 2025 சனி 16:33 | பார்வைகள் : 152
நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ். பதிலடி தந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
முதல்வர் ஸ்டாலின் தினமும் என்ன பிரச்னை வரப்போகிறது என்று எண்ணியே தன் தூக்கம் தொலைந்து விட்டதாக ஒருமுறை தி.மு.க., பொதுக்குழுவில் சொன்னார்.
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அ.இ,அ.தி.மு.க.,வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்.
பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எக்ஸ் பதிவு வாயிலாக தெரிவித்தேன்.
தமிழக நலனுக்கான 'குறைந்தபட்ச செயல் திட்டம்' இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். 'என்னவா இருக்கும்?' என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநிலப் பிரச்னைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்.
ஸ்டாலின் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது. அ.தி.மு.க., ஒரு போதும் தமிழகத்தை நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது. மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்.
காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
தமிழக விரோத தி.மு.க.,வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வாகை சூடும்.
(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, 'தொட்டுப் பார்- சீண்டிப் பார்' வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்)
இவ்வாறு அவர் கூறினார்.