மருத்துவமனையிலிருந்து தப்பி ஆற்றில் குதித்த சிறுமி!!

12 வைகாசி 2025 திங்கள் 20:58 | பார்வைகள் : 2735
இரு காவல்துறை அதிகாரிகள், இஸெர் (Isère) ஆற்றில் குதித்த 13 வயது சிறுமியை மீட்க ஆற்றில் குதித்துச் சென்று, துணிவுடன் அவளது உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பிறகு, கிரெனோபிள் (Grenoble) மற்றும் லா த்ரோன்ஸ் (La Tronche) இடையிலுள்ள பச்சைத்தீவுப் பாலம் (Pont de l’Ile Verte) அருகே நடந்ததுள்ளது.
சிறுமி, கிரெனோபிள் ஆல்ப்ஸ் மருத்துவமனையின் குழந்தை பிரிவில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர். அவர் அங்கிருந்து வெளியேறி வந்து, ஆற்றில் குதித்துள்ளார்.
பார்த்தவர்கள் உடனே எச்சரிக்கைக் குரல் எழுப்ப, சில நிமிடங்களில் காவற்துறையினர் குழு ஒன்று, சம்பவ இடத்திற்கு வந்தது. சிறுமி, நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதை காவல்துறையினர் கண்டனர். உடனே அவர்கள் இருவரும் ஆற்றில் குதித்து, சிறுமியை மீட்டு கரையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
சிறுமிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் தீயணைப்பு வீரர்களால் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.