பாக்.,கின் பலுாச் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவு

15 வைகாசி 2025 வியாழன் 10:15 | பார்வைகள் : 155
தனி நாடு கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வரும் பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிற்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியமான பலுாசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது.
அந்த பிராந்தியத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், பலுாச் விடுதலை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், அப்பகுதிக்குள் ராணுவம் நுழைய முடியவில்லை. சமீபத்தில் பலுாசிஸ்தானை தனி நாடாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை தாக்கியபோது, நம் நாட்டிற்கு பலுாச் கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து, அவர்கள் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பலுாச் கிளர்ச்சியாளரான மீர் யார் என்பவர் நேற்று வெளியிட்ட பதிவில், 'பலுாசிஸ்தான் மக்கள், பாரத மக்களுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். பாகிஸ்தானுக்கு சீனா உதவுகிறது.
'பலுாசிஸ்தானும், அதன் மக்களும் பாரத அரசுக்கு ஆதரவாக உள்ளோம். பிரதமர் மோடிக்கு நாங்கள் சொல்ல விரும்புவது, நீங்கள் தனியாக இல்லை; 6 கோடி பலுாச் தேசபக்தர்களின் ஆதரவு உங்களுக்கு உள்ளது.
'ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானை வெளியேறச் சொல்லும் இந்தியாவின் முடிவை பலுாசிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை உடனடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், டாக்காவில் 93,000 பாகிஸ்தான் படையினர் சரணடைந்தது போன்ற மற்றொரு அவமானத்தை சந்திக்க நேரிடும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.