பரிஸ் : மகிழுந்தை உடைத்து €160,000 மதிப்புள்ள தங்கம், வெள்ளி திருட்டு.. !!

20 வைகாசி 2025 செவ்வாய் 05:22 | பார்வைகள் : 625
மகிழுந்து ஒன்றை உடைத்து, அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி திருடப்பட்டுள்ளன. அதன் மொத்த மதிப்பு €160,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் மே 19, நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. Boulainvilliers RER C நிலையத்துக்கு அருகே உள்ள Rue des Vignes வீதியில் மாலை 4 மணி அளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றே சூறையாடப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி போன்றவற்றை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான மகிழுந்து ஒன்றை பின் தொடர்ந்து வந்த இரு நபர்கள், மகிழுந்தின் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த இரண்டு பைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவத்தின் போது சாரதி மகிழுந்துக்குள்ளேயே இருந்ததாகவும், அவர் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையிடப்பட்ட இரு பைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி இருந்துள்ளன.
குறித்த மகிழுந்து சம்பவம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக Rue de la Pompe வீதியில் உள்ள அவர்களது சேமிப்பகத்தில் புறப்பட்டதாகவும், அங்ஜிருந்து 2 ஆம் வட்டாரத்தில் உள்ள அவர்களது தலைமைச் செயலகத்துக்கு கொண்டுசெல்லும் போதே இச்சம்பவம் இடம்பெற்றததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
16 ஆம் வட்டாட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.