கொட்டாஞ்சேனை மாணவி மரணம் - தாயார் வழங்கிய சாட்சியம்

23 வைகாசி 2025 வெள்ளி 13:50 | பார்வைகள் : 363
உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பாக, குறித்த மாணவியின் தாயார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் முன்னிலையில் சாட்சியம் வழங்கி இருந்தார்.
இதன்போது, தமது மகள் கல்வி கற்று வந்த பாடசாலையின் கணிதபாட ஆசிரியரது துன்புறுத்தல் மற்றும் கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரால் அவமானப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களாலேயே உயிரை மாய்த்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமது மகள் ஏற்கனவே இரண்டு தடவைகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும், மன உளைச்சலுக்கு ஆளான தமது மகளைத் தனியாக விட வேண்டாம் என்று உளவள ஆலோசகர் அறிவுறுத்தி இருந்ததாகவும் மாணவியின் தாயார் தெரிவித்தார்.
எனினும் கொட்டாஞ்சேனையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் தமது வீட்டுக்கு அருகில் இருப்பதனாலேயே அங்கு அவரை அனுப்பினோம். அங்கு அவர் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த காரணங்களாலேயே தமது மகள் உயிரை மாய்த்துக் கொண்டார் என, தாம் நம்புவதாக மாணவியின் தாயார் குறிப்பிட்டார்.
தாயாரின் சாட்சி விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவியின் தந்தையின் சாட்சி விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதி, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.