Paristamil Navigation Paristamil advert login

'வில்லாதி வில்லன்' - வரலாற்றில் இடம்பிடித்த மகா கொள்ளைக்காரன்.

'வில்லாதி வில்லன்' - வரலாற்றில் இடம்பிடித்த மகா கொள்ளைக்காரன்.

5 வைகாசி 2016 வியாழன் 10:51 | பார்வைகள் : 18957


 ஆல்பர்ட் ஸ்பாகியரி (Albert Spaggiari) ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். பரிசின் எதோ ஒரு ஊரில் தன்னுடைய 'ஸ்டூடியோ'வை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு பெண் துணை உண்டு. செய்யும் வேலை பிடித்திருந்தாலும் வருமானத்திற்கு வழியில்லை. வருமானம் குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருந்தது. 
 
சில மாதங்களுக்கு முன்னர் தான் ஸ்பாகியரி சிறையில் இருந்து வெளிவந்திருந்தார். தன்னுடைய காதலிக்கு ஒரு இரத்தின கல்லை பரிசாக கொடுப்பதற்காக, நகைக்கடைக்குள் புகுந்து திருடிவிட்டார். அந்த குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் தான் புகைப்பட கலையகம் ஒன்றை வைத்தார். ஆனால் வருமான பெரும் குறையாக இருக்க, Société Générale வங்கியை கொள்ளையடிக்கலாமா என யோசித்தார்! 
 
பின்னர், பிரான்சின் nice பகுதியில் உள்ள Société Générale வங்கியை கொள்ளையடிக்கலாம் என ஒரு முடிவுக்கு வந்தார். ஆனால் இவர் தனி ஆள் ஆச்சே... எப்பிடி திருடுவது??!  சிலபல திட்டங்களை போட்டு பார்த்தார். எதுவும் சரிவருவதாக தெரியவில்லை.
 
Société Générale வங்கியில் கணக்கொன்றை ஆரம்பித்தார். பிரத்யேகமான Locker ஒன்றை வாங்கிக்கொண்டார். வங்கியில் எங்கு என்ன இருக்கிறது என ஒட்டுமொத்த தகவலையும் சேர்த்துக்கொண்டார். பின்னர் அதை வைத்து திட்டம் தீட்டினார். வங்கியை கொள்ளையடிப்பதற்குரிய 'ப்ளான்' கிடைத்து விட்டது! 
 
Marseille பகுதியில் இருக்கும் சில தொழில்முறை கொள்ளையர்களை தொடர்புகொண்டார் ஸ்பாகியரி. அவர்களையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டார். கொள்ளையடிக்கும் திட்டம் செயல்பட தொடங்கியது. 
 
முதலில், Société Générale வங்கிக்கு அருகே உள்ள சாக்கடையை தேர்ந்தெடுத்து... வங்கியில் பணப்பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி சுரங்கம் அமைக்க தொடங்கினார்கள். மொத்தமாக எட்டு மீட்டர் நீளம் அது. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் இடைவிடாது வேலை (??!) பார்த்தார்கள். இரண்டு மாதம் தேவைப்பட்டது சுரங்கம் அமைக்க! 
 
அன்று ; July 16, 1976. ஸ்பாகியரி தன் கொள்ளைக்கார நண்பர்களுடன் சேர்ந்து, சுரங்கப்பாதை மூலமாக வங்கிக்குள் நுளைந்தார். மொத்தமாக 400 Lockers மற்றும் 60 மில்லியன் யூரோக்கள் ரொக்கப்பணம் கொள்ளையடித்தார்கள். உலகில் நடந்த அனைத்து வங்கி கொள்ளைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் கொள்ளை அது. இன்றுவரை அதிக அளவு பணம் திருடப்பட்ட கொள்ளை சம்பவமாக இது இருக்கிறது. 
 
கொள்ளையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வங்கியை விட்டு வெளியேறும் முன், வங்கி சுவற்றில் 'sans armes, ni haine, ni violence' என எழுதிவிட்டு சென்றிருந்தார். (ஆயுதங்கள் இல்லையென்றால் - வெறுப்பும் இல்லை, வன்முறையும் இல்லை) இந்த உலகத்தின் மிக மோசமான திருட்டை செய்திருந்த ஸ்பாகியரி, இந்த உலகத்திற்கு சொல்லியிருந்த 'செய்தி' அது!
 
பின்னர் இந்த 'வில்லாதி வில்லன்' காவல் துறையிடம் பிடிபட்டது, சிறையில் இருந்து தப்பித்து மறைந்து வாழ்ந்தது,  தொண்டை புற்றுநோயால் 56வது வயதில் இறந்தது பற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்