Paristamil Navigation Paristamil advert login

'தனி ஒருவன்' - பிரான்சை அதிர செய்த பலே திருடன்!

'தனி ஒருவன்' - பிரான்சை அதிர செய்த பலே திருடன்!

3 வைகாசி 2016 செவ்வாய் 10:18 | பார்வைகள் : 18964


ஆறு வருடங்களுக்கு முன்னர், ஒரு நாள் அதிகாலையில், பரிஸ் 'மொடோன் ஆர்ட்' அருங்காட்சியகத்திற்கு வந்த திருடன் ஒருவன், அருங்காட்சியகத்தின் ஜன்னல் ஒன்றை உடைத்து, உள்ளே சென்று பிக்காசோ உட்பட பல முக்கியமான ஓவியங்களை திருடி, அத்தனை ஓவியங்களையும் ஒன்றாக அடுக்கி, சுற்றி கட்டி, தலையில் வைத்துக்கொண்டு, மீண்டும் அதே ஜன்னல் வழியாக வெளியேறி போய்விட்டான். பிரான்சே ஸ்தம்பித்து நின்றது. 
 
வரலாற்றில் இடம்பிடித்த மோனலிசா ஓவியத்திருட்டை வென்ற, மகா திருட்டுச்சம்பவம் இது. பறிகொடுக்கப்பட்ட ஓவியங்களின் மதிப்பு 100 மில்லியன் யூரோக்கள். நடந்தது என்னவென்று தெரியாமல் அருங்காட்சிய காவலாளிகள் உட்பட, மொத்த பிரான்சே தலையில் கைவைத்து நின்றது. 
 
அருங்காட்சியகத்தை சுற்றி காவலாளிகள், சுவற்றில் 'அலாரம்', அனைத்து திசையிலும் கண்காணிப்பு கமரா... அத்தனை அடுக்கு பாதுகாப்புகளை தாண்டி, ஜன்னல் ஒன்றை உடைத்து, உள்ளே மூன்று மணிநேரம் சாவகாசமாய் திருடிவிட்டு வெளியேறிச்சென்றிருக்கிறான் திருடன். இதை எப்படி ஏற்றுக்கொள்வது??!! 
 
 Pablo Picasso, Henri Matisse, Georges Braque,  Amedeo Modigliani  Fernand Leger என ஐந்து உலகப்புகழ்பெற்ற ஐந்து ஓவியர்களின் ஓவியங்களை பறிகொடுத்து பரிதாபமாய் நின்றது மொடோன் ஆர்ட் அருங்காட்சியகம். 
 
ஜன்னலை உடைக்கும் போது சத்தம் எழவில்லை, ஓவியத்தில் கை வைக்கும் போது அலாரம் அடிக்கவில்லை, அருங்காட்சியகத்திற்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கமராவிலும் திருடன் உள்ளே நுழைவது பதிவாகவில்லை, உள்ளே இருக்கும் கண்காணிப்பு கமராவில் மட்டும் அந்த திருடன் முகத்தில் துணி ஒன்றை கட்டியவாறு ஓவியங்களை திருடியது பதிவாகியிருந்தது. 
 
சர்வசாதாரணமாக 100 மில்லியன் பொறுமதியுள்ள ஓவியங்களை திருடிச்சென்ற 'தனி ஒருவ'னை, தனிப்படை அமைத்து தேடிவருகிறது பிரான்ஸ்!
 
 
'மொடோன் ஆர்ட்' அருங்காட்சியகத்தின் முகவரி : 
 
11 Avenue du Président Wilson, 75116 Paris, France

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்