அலையில் சிக்கிய 30 சுற்றுலாப்பயணிகள் - மீட்பு!!

2 வைகாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 625
மணல் திட்டு ஒன்றுக்கு சுற்றுலா சென்ற 30 சுற்றுலாப்பயணிகள் அலையில் சிக்கியுள்ளனர். மே 1, நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் வடக்கு பிரான்சின் Berck-sur-Mer கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பிரான்சின் வடக்கே பெருமளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் Authie எனும் விரிகுடா பகுதியில், இந்த மணல் திட்டு மிக பிரபலமான ஒன்றாகும். படகுகளில் சுற்றுலாப்பயணிகளை அங்கு அழைத்துச் செல்லும் முகவர்கள் அங்கு அதிகமாக உள்ளனர். நேற்று நண்பகல் ல்12.15 மணி அளவில் 30 வரையான சுற்றுலாப்பயணிகள் குறித்த மணல் திட்டில் நின்றிருந்த போது பாரிய அலை ஒன்று அவர்களை தாக்கியுள்ளது. அத்தோடு தண்ணீர் மட்டம் முழங்காலுக்கும் மேலாக உயர்ந்து, மணல் திட்டை மூடியது.
தேசிய கடற்பிராந்திய பாதுகாப்பு துறையான SNSM உடனடியாக செயற்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அனைத்து சுற்றுலாப்பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.