சென்ற இடமெல்லாம் ஆதரவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி

6 ஆனி 2025 வெள்ளி 04:31 | பார்வைகள் : 455
நாங்கள் செல்லும் இடம் எல்லாம் புரிதலும், ஆதரவும் கிடைத்தது,'' என எம்.பி.,க்கள் குழுவுக்கு தலைமையேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து அமெரிக்காவில் விளக்கம் அளிக்க சென்றுள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், வாஷிங்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறியதாவது: நாங்கள் செல்லும் இடம் எல்லாம் எங்களுக்கு ஆதரவும், புரிதலும் கிடைத்தது என்பதை மகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த இரண்டு விஷயத்திற்காக தான் நாங்கள் வந்துள்ளோம். இன்றும், நாளையும் சந்திக்க உள்ள போதும் அதனையே எதிர்பார்க்கிறோம்.
இதுபோன்ற நேரத்தை செலவு செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தியா வளர்ச்சியிலும், பொருளாதார விரிவாக்கத்திலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களே வெளியே கொண்டு வருவதிலும், வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைவதிலும் கவனம் கொண்ட நாடு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற செயல்கள் நமக்கு எதிராக செய்யப்படும் போது, எல்லைக்கு அப்பால் இருந்து வருபவர்கள், நமது குடிமக்களை கொல்ல அனுமதிக்க மாட்டோம், பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத முகாம்கள் ஏதும் இல்லை. இதனால் தான் தாக்குதல் நடத்த வேண்டிய கிடைக்காததால் அப்பாவி மக்கள் வசிக்கும் மக்கள் இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீதான தாக்குதல் துவங்கியதில் இருந்து சர்வதேச அளவில் போர் முறைகள் மாறிவிட்டன. ட்ரோன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போதும் ட்ரோன்கள் பயன்பாடு அதிகமாக இருந்தது. ட்ரோன்கள், ஏவுகணை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
துணை அதிபருடன் சந்திப்பு
சசி தரூர் தலைமையிலான இந்திய குழுவினர், அமெரிக்க துணை அதிபர் வான்சை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக சசிதரூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாஷிங்டன்னில் குழுவினருடன் துணை அதிபருடன் சிறப்பான சந்திப்பு நடந்தது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஒத்துழைப்பு குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.