Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., அவசரம் : பா.ம.க.,வில் சமரசம் ஏற்படுத்த ராமதாசுடன் பேச்சு

பா.ஜ., அவசரம் : பா.ம.க.,வில் சமரசம் ஏற்படுத்த ராமதாசுடன் பேச்சு

6 ஆனி 2025 வெள்ளி 10:31 | பார்வைகள் : 410


ஜூன் 6-- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவதற்குள், பா.ம.க.,வில் சமரசம் ஏற்படுத்தி, கூட்டணியை உறுதி செய்யும் முயற்சியில் பா.ஜ., இறங்கியுள்ளது. அதன் காரணமாகவே, பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தைலாபுரத்தில் நேற்று ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியதாக தெரிகிறது.

பா.ம.க.,வில், அப்பா -- மகன் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக தன் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

'நான் அறிவித்தபடி செயல்தலைவர் பதவியை ஏற்பதாக அன்புமணி கூறினால், அடுத்த வினாடியில் பிரச்னை தீர்ந்து விடும்' என ராமதாஸ் சொல்கிறார்.

அதை ஏற்க மறுக்கும் அன்புமணி, 'பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கே அதிகாரம்; நானே தலைவராக தொடர்வேன்' என, விடாப்பிடியாக இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று காலை 9:15 மணியளவில், தன் இளைய மகள் சஞ்சுத்ராவுடன், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி, தந்தை ராமதாசை சந்தித்து பேசினார். 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இச்சந்திப்பின்போது, அன்புமணியின் அம்மா சரஸ்வதி, அக்கா காந்திமதி ஆகியோரும் உடனிருந்தனர்.

சந்திப்பு முடிந்ததும் காலை 10:00 மணிக்கு வெளியே வந்த அன்புமணி, காத்திருந்த நிருபர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் காரில் ஏறிச் சென்றார். ராமதாசிடம் பேசிய பின், தன் அம்மா, அக்காவிடம் அன்புமணி அதிக நேரம் பேசியுள்ளதாக பா.ம.க.,வினர் கூறினர்.

ஆலோசனை


தைலாபுரம் தோட்டத்திலிருந்து அன்புமணி புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில், 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வந்தனர். மூன்று மணி நேரம் ராமதாசுடன் ஆலோசனை நடத்திய இருவரும், மதியம் 1:15 மணிக்கு வெளியே வந்தனர்.

அப்போது பேட்டியளித்த குருமூர்த்தி, ''பா.ஜ., சார்பில் ராமதாசை சந்திக்கவில்லை. நீண்ட கால நண்பர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்து பேசினேன். என்னை ராமதாசுக்கு மிகவும் பிடிக்கும். அதனால், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அன்புமணி வந்ததே எனக்குத் தெரியாது,'' என்றார்.

அதிரடி


கடந்த ஏப்ரல் 11ல் சென்னை வந்த அமித் ஷா, அ.தி.மு.க., உடனான கூட்டணியை அறிவித்தார். அப்போதே, பா.ம.க., உடனான கூட்டணியையும் அறிவிக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஏப்ரல் 10ம் தேதியே, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, ராமதாஸ் அதிரடி காட்டியதால், அமித் ஷாவின் எண்ணம் ஈடேறவில்லை.

அதன்பின், நாளை மறுநாள் மதுரையில் நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். சென்னை வருகையின்போது செய்ய முடியாததை, மதுரை வருகையின்போது நடத்திக் காட்ட அமித் ஷா விரும்புவதாக கூறப்படுகிறது.

கடந்த மே 29ம் தேதி பேட்டியளித்த ராமதாஸ், 'கடந்த லோக்சபா தேர்தலில், நான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டேன். ஆனால், அன்புமணியும் அவரது மனைவு சவுமியாவும், பா.ஜ., கூட்டணி அமைக்க வற்புறுத்தினர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்தால், பா.ம.க.,வுக்கு மூன்று இடங்கள் கிடைத்திருக்கும்' என்றார்.

பா.ஜ., கூட்டணிக்கு எதிராக ராமதாஸ் இருப்பதால், அவரை சரிகட்ட பா.ஜ., தலைமை விரும்புகிறது. அதை செயல்படுத்தவே, குருமூர்த்தியும், துரைசாமியும் நேற்று ராமதாசுக்கு துாது சென்றதாக தெரிகிறது.

ஏப்ரல் 11ல், அமித் ஷா சென்னை வந்தபோது, குருமூர்த்தி வீட்டுக்குச் சென்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பா.ம.க.,வை கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாகவே, அப்போது பேசியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், அமித் ஷா வருகைக்கு முன், பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையே சமரசம் ஏற்படுத்த, இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ம.க., - பா.ஜ., நிர்வாகிகள் பலரிடம் பேசியபோது, 'குருமூர்த்தி கூறியது போல, நண்பர் என்பதற்காக ராமதாசை சந்தித்திருந்தால், மூன்று மணி நேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த சந்திப்பின்போது, ராமதாசிடம், தொலைபேசியில் அமித் ஷாவும் பேசியிருக்கிறார். அதனால் தான், சந்திப்பு இவ்வளவு நேரம் நீண்டுள்ளது. இது முழுக்க முழுக்க கூட்டணிக்கான சமாதான முயற்சிதான்' என்றனர்.

அப்பா -- மகன் மோதல் நீடிப்பது, பா.ம.க.,வை பலவீனமாக்கி விடும் என்பதையும், தி.மு.க.,வுக்கு அது சாதகமாகி விடும் என்பதையும், ராமதாசிடம் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் எடுத்துக் கூறியதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

கட்சி நிர்வாகிகளிடம் அன்புமணி பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், 'பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைகளுக்கு, தலைமை அலுவலக செயலர் அன்பழகன் தான் காரணம். ராமதாசின் கை, கால்களை பிடித்து, மாவட்ட செயலர் பதவிகளை, 5 லட்சம் ரூபாய்க்கு விற்று வருகிறார். கட்சி மற்றும் சமுதாய துரோகியான அவருக்கு வாத்தியார் துணையாக இருக்கிறார்' என, அன்புமணி கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் அன்பழகன், ராமதாசுக்கு நெருக்கமானவர். அன்புமணி குறிப்பிடும் வாத்தியார் ஜி.கே.மணி என்றும் பா.ம.க.,வினர் சொல்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்