நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்

6 ஆனி 2025 வெள்ளி 17:09 | பார்வைகள் : 342
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பா.ஜ., ஆட்சியமைத்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிய கல்வி கொள்கை, திறன் மேம்பாடு மற்றும் ஸ்டார்ட் அப்களின் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற முன்னெடுப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர். நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவதில் மகிழ்ச்சியை அளிக்கிறது, எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் விதமாக இ-புத்தகத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 11 ஆண்டுகளாக நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் சரிசமமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.
2001ம் ஆண்டு குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு பிரதமரானார். சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாகத்தில் அவர் செய்த குறிப்பிடத்தக்க மாற்றங்களின் மூலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும், முன்மாதிரியான உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.