விஷால் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா?

6 ஆனி 2025 வெள்ளி 17:42 | பார்வைகள் : 676
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே கடந்த நான்கு வருடங்களாக நீதிமன்ற வழக்கு ஒன்று நடந்து வருகிறது. பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்ச ரூபாய் கடனை, லைக்கா நிறுவனம் ஏற்று, அந்தத் தொகையை அன்புச்செழியனிடம் செலுத்தியது.
அதற்காக விஷால் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என இவர்கள் இருவரும் ஒப்பந்தம் போட்டனர். ஆனால், அதை மீறி 'வீரமே வாகை சூடும்' படத்தை வேறு நிறுவனத்திடம் வெளியிட விற்றார் விஷால். அதைத் தொடர்ந்து அவர் மீது 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது லைக்கா நிறுவனம்.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. லைக்காவிற்கு விஷால் வழங்க வேண்டிய தொகையை 30 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும், வழக்கு செலவுத் தொகையையும் தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
30 சதவீத வட்டி என்றால் வருடத்திற்கு சுமார் 6 கோடி வருகிறது. அதுவே, நான்கு வருடத்திற்கு 24 கோடி வருகிறது. மொத்தமாக 45 கோடி வருகிறது. அவ்வளவு தொகையை விஷால் செலுத்துவாரா அல்லது மேல் முறையீடு செய்வாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், நடிகர் சங்கத்தின் இந்நாள் செயலாளர் ஆக இருக்கும் விஷால் இந்த வழக்கில் தோல்வியடைந்தது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை அவர் பின்பற்ற வேண்டும் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.