தேர்தல் முடிவு விவகாரம்: தேர்தல் கமிஷன் விளக்கம்: ஏற்க ராகுல் மறுப்பு

8 ஆனி 2025 ஞாயிறு 05:08 | பார்வைகள் : 384
மஹாராஷ்டிரா தேர்தல் முடிவு தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்தது. ஆனால், இதனை ஏற்காத ராகுல், உண்மையை வெளியிட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். தேர்தல் முடிவுகள் பிக்சிங் செய்யப்பட்டது என குற்றம்சாட்டியிருந்தார்.
அபத்தம்
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வேட்பாளர்கள் / கட்சிகளால் முறையாக நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களோ அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன் அசாதாரண ஓட்டுப்பதிவு தொடர்பாகவும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் எழுப்பவில்லை.
மஹாராஷ்டிரா தேர்தலின் போது வாக்காளர் பட்டியலை இறுதி செய்யப்பட்டபோது 9,77,90,752 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், 89 பேர் மட்டுமே முதலாவது மேல்முறையீட்டு ஆணையித்திடம் முறையிட்டனர். அதில் ஒருவர் மட்டுமே தேர்தல் கமிஷன் சிஇஓ .,விடம் முறையிட்டனர். 2024ல் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அல்லது வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் எந்த புகாரும் இல்லை .
ஓட்டுச்சாவடி வாரியாக முகவர்களை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நியமித்தன. மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியலுக்கு எதிராக எழுப்பப்பட்ட இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதுபோல் ஆகும். தேர்தல் ஆணையம், இந்த உண்மைகள் அனைத்தையும் கடந்த ஆண்டு 2024 டிச.,24 ல் காங்கிரசுக்கு அளித்த பதிலில் தெரிவித்து இருந்தது. இது தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் உள்ளது. இது போன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் போது இந்த உண்மைகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக தெரிகிறது. வாக்காளர்களின் சாதகமற்ற தீர்ப்புக்கு பிறகு, தேர்தல் கமிஷன் சமரசம் செய்யப்பட்டு உள்ளது என்று கூறி அதனை அவதூறு செய்ய முயற்சி செய்வது முற்றிலும் அபத்தம். இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
வெளியிட வேண்டும்
இதனைத் தொடர்ந்து ராகுல் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: தேர்தல் ஆணையம் ஒரு அரசியல்சாசன அமைப்பு. கையெழுத்திடாத, தவிர்க்கும் குறிப்புகளை இடைத்தரகர்களுக்கு வெளியிடுவது என்பது தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான வழி அல்ல.
உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், எனது கேள்விகளுக்கு பதிலளித்து நிரூபிக்கவும்.
மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்
மஹாராஷ்டிரா ஓட்டுச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும்.
இதனை தவிர்ப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது. உண்மையை சொல்ல வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.