மெஸ்ஸி விளையாடிய அணியில் இளம் வீரர்கள் இடைநீக்கம்- காரணம் ஒற்றை புகைப்படம்

7 ஆனி 2025 சனி 18:09 | பார்வைகள் : 323
ஒற்றை புகைப்படத்திற்காக மெஸ்ஸி விளையாடிய அணியின் இளம்வீரர்கள் அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அர்ஜென்டினாவின் கிளப் அணியான நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியில் மெஸ்ஸி, மரடோனா உள்ளிட்ட கால்பந்து ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர்.
இந்த அணியின் 9 வயது இளம் வீரர்கள் சிலர், எதிர் அணியான ரொசாரியோ சென்ட்ரல் அணியை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான இக்னாசியோ மல்கோராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த புகைப்படம் வைரலான நிலையில், அந்த இளம்வீரர்களை பயிற்சியில் இருந்து இடைநிறுத்தியதோடு, அவர்களின் 3 மாத கால உதவித்தொகையை ரத்து செய்துள்ளது நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணி.
நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியின் இந்த செயலுக்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இக்னாசியோ மல்கோரா, "குழந்தைகள் அப்பாவிகள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. அவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் தலைமை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, பாதுகாப்பு அமைச்சர் பாட்ரி
சியா புல்ரிச் ஆகியோரும் இந்த விடயத்தை கண்டித்துள்ள நிலையில், நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் வீரர்கள் கிளப்பில் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளனர் என்றும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இயக்குநர்கள் அடுத்த வாரம் அவர்களின் பெற்றோரைச் சந்திப்பார்கள்என நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணி தெரிவித்துள்ளது.