பாராளுமன்றத்தைக் கலைத்தது தவறான முடிவு... மக்கள் கருத்து!!

8 ஆனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 3333
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது அரசாங்கத்தை ஒரு வருடத்துக்கு முன்னர் கலைத்து, புதிய பொது தேர்தல் அறிவித்தார்.
ஒரு வருடத்தின் பின்னர் மக்கள் இது தொடர்பில் என்ன நினைக்கின்றார்கள் என கருத்துக்கணிப்பு ஒன்றில் கேட்கப்பட்டது. அதில் பத்தில் ஏழு பேர் 'தவறான முடிவு' என பதிலளித்துள்ளனர். 'மக்ரோன் சபையை கலைத்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது தவறான முடிவு' என 71% சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற வருடம் சபை கலைக்கப்பட்டபோது இடம்பெற்ற இதேபோன்ற கருத்துக்கணிப்போடு ஒப்பிடுகையில் இது 6 புள்ளிகள் அதிகமாகும்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பெரும்பான்மை கொண்டிராதது நாட்டுக்கு பின்னடைவாக மட்டுமே இருக்கும் எனவும், நல்ல செயற்திட்டங்களை எதிர்கட்சிகள் நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டையாக இருக்கும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை BFMTV மற்றும் La Tribune Dimanche போன்ற ஊடகங்களுக்காக Elabe நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,610 பேர் கலந்துகொண்டிருந்தனர்.