சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் கொக்கெய்ன் குழு!!

8 ஆனி 2025 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 596
சார்ள்-து-கோல் (Roissy Charles de Gaulle) விமான நிலையத்திலுள்ள பயணப்பொதிகளை நிர்வகிக்கும் பணியாளர்கள் (BAGAGISTE) தொடர்புடைய கொக்கைன் கடத்தல் செயற்குழு ஒன்றை ஜோந்தார்மினர் மடக்கி உள்ளனர்.
2025 ஜூன் 3-ம் திகதி, ஏழு பேர் மீது கொக்கைன் கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், Île-de-France பகுதியில் அமைந்துள்ள சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் பணியாற்றும் பயணப்பொதி மற்றும் சரக்குப் பணியாளர்கள் இதில் பங்காற்றியுள்ளனர். அவர்கள், கடந்த சில மாதங்களாக பிரேசிலிலிருந்து வந்த போதைப்பொருள் பொதிகளை பிரான்சிற்குள் கடத்துவதை எளிதாக்கி உதவி உள்ளனர்.
ஜூன் 3 அன்று Île-de-France -இன் நான்கு மற்றும் Hauts-de-France-இன் இரண்டு மாவட்டங்களில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணை கடந்த ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ஜோந்தாரம் வீரர்கள் மற்றும் பல சிறப்பு பிரிவுகள் இதில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வலையமைப்பு செய்ன்-சன்-துனி பகுதியில் மிகவும் செயற்பாடாக இருந்தது. அந்த அமைப்பு மாதத்திற்கு 20 முதல் 50 கிலோகிராம் வரை கொக்கைனைக் கடத்தக் கூடிய திறனுடைய, விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் மேலாளர்களைப் பயன்படுத்தி செயல்பட்டுள்ளது.
ஜூன் 3-ம் திகதியன்று நடைபெற்ற சோதனையில், சுமார் 500,000 சொத்துக்கள் மற்றும் 100,000 யூரோ பணமும் கைப்பற்றப்பட்டன. ஐந்து வாகனங்கள், ஒரு வீடு, பல பிரமாண்ட விலையுள்ள ஆடைகள் மற்றும் பல பொருட்கள், ஒரு கையடக்க துப்பாக்கி ஆகியவையும் அரச அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.