Paristamil Navigation Paristamil advert login

பிள்ளைகளை திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா ?

பிள்ளைகளை திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா ?

8 ஆனி 2025 ஞாயிறு 17:42 | பார்வைகள் : 374


குழந்தைகள் அல்லது சிறுவர்/சிறுமியர்கள் வளரும் அனைத்து வீடுகளிலும் ஒழுங்குமுறை என்பது கேள்விக்குறிதான். வீடெங்கிலும் துணிகள் இறைக்கப்பட்டு, எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இல்லாமலும், விளையாட்டு பொருட்களால் நிரம்பியும், உணவு பொருட்கள் தரையில் சிந்தபட்டும் ஒழுங்கற்ற அமைப்பில் தான் குழந்தைகள் இருக்கும் வீடுகள் இருக்கும். சில நேரங்களில் பிள்ளைகள் செய்யும் சேட்டைகளால் நமக்கு அதிக கோபம் ஏற்படலாம். ஆனால் இது மிகவும் சாதாரண விஷயம் என்பதை நினைவில் கொள்ளவும். சேட்டைகளுக்காக பிள்ளைகளை திட்டுவது தான் சரியானது என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைத்து கொண்டிருந்தாலும் இதனால் பிள்ளைகளுக்கு பெருமளவில் நன்மைகள் ஏற்படுவதில்லை என்பது தான் உண்மை. நல்ல விதமான வாழ்க்கைக்கு ஒழுக்கம் இன்றியமையாதது என்றாலும் அதை நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் விதமும் ஒழுக்கமானதாக இருக்க வேண்டும் அல்லவா?

உணர்வு ரீதியாக பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள் : பிள்ளைகள் செய்யும் தவறுகளை நாம் பொறுத்துக்கொள்ளாமல் கடுமையான வார்த்தைகளை குறிப்பிட்டு திட்டும் போது இது அவர்களது மூளையில் இவையனைத்தும் ஒரு ஆபத்தான விஷயம் என்பதைப் போல் பதிவாகிவிடும். பிள்ளைகள் எப்போதும் தங்கள் பாதுகாப்பாக உணரும் சூழ்நிலையிலேயே வளர ஆசைப்படுவார்கள். நீங்கள் அடிக்கடி கோபம் கொண்டு அவர்களை திட்டிக் கொண்டே இருந்தால் அவர்களுடைய அடிப்படையே ஆட்டம் கண்டு விடும் என்பது தான் கசப்பான உண்மை! மேலும் அவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாகவும் அன்பற்ற பிள்ளைகளாகவும் வளரும் வாய்ப்புகள் அதிகம். பயம் கலந்த கீழ்படிதல் எப்போதும் வாழ்க்கைக்கு உதவாது. அதற்கு பதிலாக பிள்ளைகளுக்கு புரிந்து கொள்ளும் உணர்வை வளர்க்க வேண்டும். சேட்டைகள் செய்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு பொறுமையாக அவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக அதனை புரிந்து கொள்வார்கள். திட்டுவதற்கு பதிலாக வீட்டிலேயே நீங்கள் மனம் விட்டு பேசுவதற்கு ஏதேனும் ஒரு இடத்தை நீங்கள் உருவாக்கலாம். இது போன்ற கோபமான சூழ்நிலைகள் உருவாகும் போது அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்று இருவரும் அமைதியான மனநிலைக்கு வந்த பிறகு விஷயங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு புரிய வைக்கலாம்.

கோபம் உயர்வானது என்று எண்ணத்தை கொடுத்து விடலாம் : நீங்கள் அடிக்கடி கோபம் கொண்டு, அந்த கோபத்தின் மூலம் அவர்களை திருத்துவதாக நினைத்தால் அது அவர்களது மனதில் கோபம் ஒரு உயர்ந்த விஷயம் என்பதை போல் பதிந்து விடும். அவர்களை நீங்கள் கட்டுபடுத்துவதற்கு கோபத்தை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறீர்களோ, அவர்களும் வளர வளர அவர்களுடைய வாழ்க்கையில் கோபத்தை எதற்கெடுத்தாலும் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்குத்தான் பாதிப்புக அதிகம் என்பதை மறக்க வேண்டாம். மேலும் இதனால் கீழ்ப்படியா தன்மையும் அவர்களது மனதில் ஏற்படும். அதற்கு பதிலாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதைகளை சொல்லி, அந்த கதாபாத்திரங்கள் வழியாக அவர்களுடைய மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கலாம்.

கவனச் சிதறல்கள் அதிகரிக்கும் : நீங்கள் கோபத்தால் கத்தும் போது அது பிள்ளைகளின் மனதில் பயத்தை உண்டாக்கும். இதனால் அவர்களது கவனம் பாதிக்கப்படும். மேலும் உளவியல் ரீதியாகவும் பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே இது போன்ற கடினமான சூழ்நிலைகளின் போது அவர்களின் மூளை தானாகவே தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு சென்று விடுமே தவிர மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த அனுமதிக்காது. மேலும் உளவியல் ரீதியாகவும் பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ி இதன் காரணமாகத்தான் குழந்தைகளை அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டக்கூடாது. அதற்கு பதிலாக பொறுமையாக ஒழுக்க நெறிகளை பற்றி எடுத்துரைக்கலாம். கோபத்தில் கத்துவதற்கு பதிலாக பொறுமையாக அவர்களை உங்கள் அருகில் அமர வைத்து “ஒரு முக்கியமான விஷயத்தை நான் உனக்கு கூற வேண்டும். நன்றாக கவனி” என்று அவர்களை பயம் கொள்ளாத வண்ணம் அவர்களுக்கு நல்ல விஷயங்களை போதிக்கலாம்.

கோபத்தில் திட்டுவதால் அவமானமாக உணர்வார்களே தவிர பொறுப்பு ஏற்படாது: பெற்றோர்கள் பலரும் பிள்ளைகளை கடிந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கும் பொறுப்புணர்வை உண்டாக்க வேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஒவ்வொரு முறை கோபத்தில் அவர்களை திட்டும் போதும் அவர்களுக்கு அது அதிக அவமானத்தை மட்டுமே ஏற்படுத்தும்.மேலும் அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை குறைந்து மிகவும் சோர்வாகவும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக இது போன்ற சிறிய தவறுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் மென்மையாக தவறுகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் பொறுப்பானவர்களாக மாறுவார்கள்.

பெற்றோர்-பிள்ளைகள் உறவில் விரிசலை உண்டாக்கும் : கோபத்தால் பிள்ளைகளை திட்டும்போது அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இது அவர்களுக்கு பய உணர்வை உண்டாக்கும் அடிக்கடி நீங்கள் கோபப்படும்போது குழந்தைகள் மனதில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாளடைவில் இது பெற்றோர் -பிள்ளைகள் உறவில் விரிசலை உண்டாக்கும். மேலும் அவர்களும் முக்கியமான சில விஷயங்களை உங்களிடம் கூற நினைத்தாலும் நீங்கள் ஏற்படுத்திய பயஉணர்வின் காரணமாக உங்களிடம் மனம் விட்டு பேசவே அவர்கள் தயங்குவார்கள். இது சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வாழ்க்கையில் பல்வேறு தவறுகளை செய்வதற்கு வழிவகுக்கும். நீங்கள் கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களின் தவறுகளையும் மென்மையாக சுட்டிக்காட்டி அவர்களை பயப்படுத்தாமல் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அன்பாக கூறினாலே பிள்ளைகள் நல்ல வழியை பின்பற்றுவார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்