அளவுக்கு அதிகமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுவதால் ஆபத்தா..?

9 ஆனி 2025 திங்கள் 18:06 | பார்வைகள் : 200
நடைப்பயிற்சி என்பது குறைந்த தாக்கம் கொண்ட ஒரு ஏரோபிக் பயிற்சி. இதனால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. எளிமையான மற்றும் எந்த ஒரு உபகரணம் இல்லாமல் செய்யப்படும் இந்த ஒர்க்அவுட் மூலமாக நம்முடைய உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக நடைபயிற்சியில் ஈடுபடுவதும் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே ஒரு நாளைக்கு எவ்வளவு நடை பயிற்சியை மேற்கொள்ளலாம் மற்றும் அளவுக்கு அதிகமாக நடைபயிற்சியில் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் என்பது பெரும்பாலான நபர்களின் இலக்காக அமைகிறது. ஆனால் இது உங்களுடைய வயது, உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட இலக்குகளைப் பொறுத்து அமையும். ஆகவே 8000 முதல் 10,000 அடிகள் வரை ஒரு நாளைக்கு அமைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உங்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நாம் ஏற்கனவே கூறியது போல உங்களுடைய உடல்தகுதி, அனுபவம் மற்றும் பொதுவான ஆரோக்கியம் ஆகியவை நீங்கள் எவ்வளவு நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்கும். 30 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்குப் பிறகு புதிதாக நடைப்பயிற்சியை மேற்கொண்டவர் வலியை அனுபவிக்கலாம். இதுவே ஒரு அனுபவம் பெற்ற நபர் பல மணி நேரங்கள் நடந்த பிறகும் எந்த ஒரு வலியையும் அனுபவிக்காமல் இருக்கலாம். எனவே உங்களுடைய உடல் அறிகுறிகளுக்குக் கவனம் செலுத்துவது அவசியம். ஆகவே இப்போது அளவுக்கு அதிகமாக நடை நடப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் பற்றிப் பார்க்கலாம்.
ஏற்கனவே காயம் ஏற்பட்ட மூட்டுகளில் மீண்டும் மீண்டும் காயம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு நடக்கும் போது நீங்கள் பின்பற்றும் தோரணை காரணமாக இருக்கலாம். எனவே அளவுக்கு அதிகமாக நடக்கும் போது காயப்பட்ட மூட்டுகளில் எதிர்பாராத விதமாக மோசமான விபத்துகள் உண்டாவதற்குச் சாத்தியங்கள் அதிகமாக உள்ளது.
நீங்கள் அளவுக்கு அதிகமாக நடந்தால் கால்களைச் சுற்றி கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் ஏற்படலாம். வழக்கமாக புதிய ஷூக்களை அணியும்போது கால்களில் இவை ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் காலணிகள் சரியாக இல்லாத காரணத்தாலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கான உங்களுடைய திறன் என்பது அதிகப்படியான பயிற்சியால் பாதிக்கப்படலாம். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நீங்கள் எளிதாகச் சோர்வடைந்து விடுவீர்கள். மூச்சு விடுவதில் சிக்கல், நடக்கும்போது பேசுவதற்குச் சிரமப்படுவீர்கள். இந்தச் சமயத்தில் நீங்கள் நடைபயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.
சமீபத்தில் நீங்கள் அளவுக்கு அதிகமாக நடந்திருந்தால் கால்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம். இதனால் உங்களுடைய நடைபயிற்சி திறன் பாதிக்கப்படலாம். நீண்ட நேரத்திற்குத் தொடர்ச்சியாக நடக்கும் போது தசைகள் இறுக்கப்பட்டு, இந்த வீக்கமும், வலியும் ஏற்படுகிறது.
நடைப்பயிற்சி என்பது மனநிலையை மேம்படுத்தக்கூடியது என்றாலும் அளவுக்கு அதிகமாக அதனைச் செய்யும் போது பதட்டம் ஏற்படுகிறது. எனவே மனச்சோர்வு மற்றும் கோபம் போன்றவை அடிக்கடி ஏற்படுவது நீங்கள் அளவுக்கு அதிகமாக நடைபயிற்சி மேற்கொண்டுள்ளீர்கள் என்பதற்கான அறிகுறி.
புதிதாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் 15 நிமிடங்கள் நடைபயிற்சியை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும். படிப்படியாக ஒவ்வொரு சில நிமிடங்களாக அதனை அதிகரித்து 30 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி என்ற வரம்பை அமைத்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சியின் போது மூக்கு வழியாக சுவாசிக்காமல், வாய் வழியாக சுவாசிப்பது நல்லது. நடைபயிற்சியின் முழுப் பயன்களைப் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் அதனைச் செய்யுங்கள்.