காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்

9 ஆனி 2025 திங்கள் 19:40 | பார்வைகள் : 410
கிரெட்டா துன்பர்க் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களுடன் சென்ற காசாவுக்கான மனிதாபிமான கப்பலை இஸ்ரேல் படையினர் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிகள் செய்தி வருகின்றன.
இந்நிலையில், காசா பகுதிக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் கொண்டு சென்ற 'மட்லீன்' என்ற கப்பலை சர்வதேச கடல்பரப்பில் வைத்து இஸ்ரேல் படையினர் சிறைபிடித்தனர்.
மேலும், அந்தக் கப்பலில் பயணித்த காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் மற்றும் ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர் ரிமா ஹசன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ப்ரீடம் ப்ளோடில்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், 'மல்டீன் கப்பலை காசாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கப்பலில் இருந்தவர்கள் கைகளை உயர்த்திய நிலையில் அமர்ந்திருக்கும் போட்டோ வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.