2026 ஐபிஎல் தொடரில் RCB அணிக்கு தடையா? நடவடிக்கை எடுக்க உள்ள பிசிசிஐ

9 ஆனி 2025 திங்கள் 20:40 | பார்வைகள் : 218
கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் RCB அணிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வரும் நிலையில், முதல்முறையாக RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதனை பார்வையிட, லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பெங்களூரு காவல் ஆணையர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். RCB அணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவசரமாக விழாவிற்கு ஏற்பாடு செய்தது கர்நாடக அரசா அல்லது ஆர்சிபி அணி நிர்வாகமா என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விழாவிற்கு அரசுதான் ஏற்பாடு செய்தது என கர்நாடக கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வெற்றி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த பின்னரும், RCB அணி நிர்வாகம் அதனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம், பேரணிக்கு ரசிகர்களை அழைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விளக்கமளித்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "இது ஆர்சிபியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பிசிசிஐதான் பொறுப்பு. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வோம்.
இறுதியில், பிசிசிஐ நடவடிக்கை வேண்டியிருக்கும். நாங்கள் அமைதியாகப் பார்வையாளராக இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விசாரணையில் RCB அணி மீது தவறு உறுதி செய்யப்பட்டால், ஒரு ஆண்டு காலத்திற்கு RCB அணிக்கு பிசிசிஐ தடை விதிக்கலாம் என கூறப்படுகிறது.
அதேவேளையில், இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் நிர்வாகம் RCB அணியின் கணக்கை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
முன்னதாக சூதாட்ட புகாரில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பிசிசிஐ 2 ஆண்டு கால தடை விதித்தது.