நீதிமன்றத்தில் பதிலளிக்க மறுத்த மொகமத் அம்ரா!

11 ஆனி 2025 புதன் 15:53 | பார்வைகள் : 1264
இன்று (ஜூன் 11) கொண்டே-சூர்-சார்த்தே சிறையிலிருந்து உலங்கு வானூர்தி மூலம் கொண்டு வரப்பட்டு, பலமாகப் பாதுகாக்கப்பட்ட வாகனத் தொடரணியில் பரிஸ் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டபோதும், 2024 இல் தப்பிய சம்பவம் மற்றும் படுகொலைகள் குறித்து நீதிபதிகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
'என் வாடிக்கையாளரின் பாதுகாப்பு உரிமைகள் உறுதி செய்யப்படவில்லை' என அம்ராவின் வழக்கறிஞர் லூகா மொன்தானியே (Me Lucas Montagnier) தெரிவித்துள்ளார்.
ரகசியத்தன்மை இல்லாது, சிறையில் வழக்கறிஞருடனான உரையாடல்களில் காவலர் கதவின் பின்னால் நின்று கேட்டதாகவும் தனது கணினியில் உள்ள வழக்கு ஆவணங்களை காவலர் கண்ணாடி வழியாக பார்த்தார் என்றும் வழக்கறிஞர் லூகா மொன்தானியே குற்றம் சாட்டியுள்ளார்.
'நியாயமான விசாரணைக்கான சூழ்நிலைகள் இல்லை. நீதிமன்றம் அமைதியாக பணியாற்ற வேண்டும் என்பது போல, பாதுகாப்பு வழக்கறிஞர்களுக்கும் அந்த உரிமை உண்டு' என்று வலியுறுத்தி உள்ளார்.
'ரகசிய உரையாடல்கள் உறுதி செய்யப்படும் வரை என் வாடிக்கையாளர் பதிலளிக்க மாட்டார்' என்று வழக்கறிஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொகமத் அம்ரா பிற்பகல் 2 மணியளவில் பரிஸ் நீதிமன்றத்திலிருந்து வெலிசி-வில்லாகோப்லே விமானத் தளத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக மீண்டும் உலங்கு வானூர்தி மூலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மே 2024-ல் காவலர்கள் கொலை செய்யப்பட்ட தப்பிய சம்பவத்தில் ஈடுபட்ட மொகமத் அம்ரா, பிரான்சின் அதிக பாதுகாப்புள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் குறித்த கடும் விவாதங்களைத் தூண்டியுள்ளது.