Paristamil Navigation Paristamil advert login

தீப்பற்றிய ரசாயன கப்பல் கடலில் மூழ்கும் அபாயம் தமிழக கடற்பகுதிக்கு பாதிப்பு?

தீப்பற்றிய ரசாயன கப்பல் கடலில் மூழ்கும் அபாயம் தமிழக கடற்பகுதிக்கு பாதிப்பு?

12 ஆனி 2025 வியாழன் 10:19 | பார்வைகள் : 672


இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்று கொண்டிருந்த, 'வாங் ஹை 506' என்ற சரக்கு கப்பல், கேரள மாநிலம், கோழிக்கோடு வேப்பூர் துறைமுகத்திற்கும், கண்ணுார் அழிக்கல் துறைமுகத்திற்கும் இடையே கடல் பகுதியில் சென்றபோது தீ பிடித்தது.

அதில், 150க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் சில கன்டெய்னர்கள் வெடித்து சிதறின. இரு நாட்களாக எரியும் சரக்கு கப்பலில் இருக்கும் 140 கன்டெய்னர்களில், உராய்வால் தீப்பிடிக்கும் ரசாயனங்கள், காற்றில் கலந்தால் தீப்பிடிக்கும் ரசாயனங்கள், மண்ணெண்ணெய், பெயின்ட் உள்ளன. இதனால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது.

கடலோர காவல் படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் கப்பலுக்கு மிக அருகில் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று முதல், மேலும் மூன்று கப்பல்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இரு நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் கப்பல் சரியத் துவங்கியுள்ளது. கப்பல் வெடித்து கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கப்பலில் 2,000 டன் எரிபொருள் மற்றும் 240 டன் டீசல் உள்ளன. கப்பல் கடலுக்குள் மூழ்கினால், கடலின் சூழல் பெரும் பாதிப்பை சந்திக்கும். கடலில் ரசாயனம், டீசல் கலக்கும் பட்சத்தில் தமிழக கடல் பகுதியிலும் பரவ வாய்ப்புஉள்ளது.

கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்