Paristamil Navigation Paristamil advert login

ரவா பொங்கல்..

ரவா பொங்கல்..

12 ஆனி 2025 வியாழன் 16:02 | பார்வைகள் : 319


பொங்கலில் விதவிதமான பொங்கல்கள் உள்ளன. அதில் ரவை பொங்கலும் ஒன்று. சில வகை பொங்கல்கள் உண்பதால் நமக்கு சோர்வு ஏற்பட்டு தூக்கம் வரும். ஆனால் இந்த ரவா பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
வெண்பொங்கல் செய்ய கூட அதிக நேரம் எடுக்கும். ஆனால் காஞ்சிபுரம் ஃபேமஸ் ரவா பொங்கலை 10 நிமிடத்தில் செய்து விடலாம். இந்த காஞ்சிபுரம் ரவா பொங்கலை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பொங்கல் சாப்பிட பிடிக்காதவர்களும் திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த பொங்கலுக்கு தேங்காய் சட்னி, சாம்பார் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். இந்த ரவை பொங்கலை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
தண்ணீர் - 3.5 கப்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
முந்திரி - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:
கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி பாசிப் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த வெப்பத்தில் வறுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.  பருப்பு வெந்த பின் வறுத்து வைத்த ரவை சேர்த்து அத்துடன் உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்க்கவும். பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நிமிடங்கள் அவற்றை வறுத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக தாளித்து பொங்கலில் அதை சேர்த்து கிளற வேண்டும். இப்போது சுவையான காஞ்சிபுரம் ஃபேமஸ் ரவா பொங்கல் ரெடி.

வர்த்தக‌ விளம்பரங்கள்