தமிழ் - கன்னட "தக் லைவ்" புயலின் மையத்தில் கமல்ஹாசன்

13 ஆனி 2025 வெள்ளி 11:49 | பார்வைகள் : 159
முன்னணி தமிழ் நடிகரான கமல்ஹாசன் தற்போது மூன்று காரணங்களுக்காக செய்திகளில் பெரிதாக அடிபடுகிறார். முதலாவதாக, நடிகரும் அரசியல்வாதியுமான அவர் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல்சபையான ராஜ்ய சபாவுக்கு தெரிவு செய்யப்படவிருக்கிறார். இரண்டாவதாக, சிறந்த திரைப்பட இயக்குநரான மணிரத்தினம் இயக்கிய - ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு அண்மையில் உலகம் பூராவும் வெளியிடப்பட்டிருக்கும் " தக் லைவ் " ( Thug Life ) திரைப்படத்தின் கதாநாயகன் கமல் ஹாசன்.
அந்த படத்துக்கு அவர் கூட்டாக திரைக்கதையை எழுதியதுடன் கூட்டு தயாரிப்பாளருமாவார்.
மூன்றாவதாக, கமல்ஹாசன் பகிரங்கமாக வெளிப்படுத்திய கருத்துக்களின் விளைவாக மூண்ட ஒரு சர்ச்சைக்குள் அவர் சிக்கிக்கொண்டுள்ளார்.
தமிழ் மொழிக்கும் கன்னட மொழிக்கும் இடையில் சண்டை ஒன்று மூண்டிருப்துடன் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அந்த திரைப்படம் வெளியிடப்படவுமில்லை. சுருக்கமாக சொல்வதானால் கமல்ஹாசன் அரசியல் -- சினிமா புயல் ஒன்றின் மையத்தில் சிக்கியிருக்கிறார்.
இத்தகைய பின்புலத்தில், இந்த கட்டுரை கமல்ஹாசன் மீது கவனத்தை திருப்புகிறது.கமல் என்று பிரபல்யமாக அறியப்பட்ட கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இன்று தலைசிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் மிகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
அவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நடனக்கலைஞர், நடனப் பயிற்றுவிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் என்று ஒரு பன்முக கலைஞராக விளங்குகிறார். 1960 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனாக நடித்து திரையுலகப் பிரவேசம் செய்த 70 வயதான அவர் எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.தீவிர இரசிகர்கள் அவரை ' உலக நாயகன் ' என்று போற்றுகிறார்கள்.
கமல்ஹாசனின் பிந்திய திரைப்படமான " தக் லைவ் ' 2025 ஜூன் 5 ஆம் திகதி வெளியிப்பட்டது. புகழ்பெற்ற இயக்குநர் மணிரத்தினம் அந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவர் கமல்ஹாசனின் பெறாமகள் சுஹாசினி ஹாசனின் கணவர். சுஹாசினியும் விருதுபெற்ற ஒரு சிறந்த நடிகை.
மணிரத்தின் திரைத்துறை வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த " நாயகன் " திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார். சிறந்த கலைக்காவியமான அந்த திரைப்படம் வர்த்தக ரீதியில் பெருவெற்றியைப் பெற்று நடிகருக்கும் இயக்குநருக்கும் பாராட்டுக்களை குவித்தது.
இதுகாலவரையில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த 100 திரைப்படங்களில் நாயகனும் ஒன்று என்று அமெரிக்காவின் "ரைம்" சஞ்சிகை மதிப்பிட்டிருந்தது.
" தக் லைவ் "
தக் லைவ் 38 வருடகால நீண்ட இடைவெளி ஒன்றுக்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்தினமும் இணைத்து செயற்பட்ட திரைப்படமாக அமைகிறது. அது புதிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.
புதிதாக வெளியிடப்படும் தனது திரைப் படங்களைச் சுற்றி ஒரு சர்ச்சையை உருவாக்கக்கூடிய எதையாவது கூறுவதில் அல்லது செய்வதில் கமல்ஹாசன் விருப்பத்தை கொண்டவர் என்று கூறுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். ";தக் லைவ் " திரைப்படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்று தோன்றுகிறது. முழு இந்தியாவிலுமே மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைக்கப்போகிறது என்று கூறப்படும் திரைப்படம் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது. இந்த சர்ச்சை காரணமாக ஜூன் 5 ஆம் திகதி அது கர்நாடகாவில் திரையிடப்படவில்லை.
நடந்தது இதுதான்.தக் லைவின் ஓடியோ வெளியப்பட்ட சென்னை நிகழ்வில் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமாரும் கமல்ஹாசனும் மேடையில் இருந்தார்கள். சிவராஜ்குமார் புஙழ்பெற்ற கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன். கமலும் சிவ்ராஜும் நெருக்கமான நண்பர்கள்.
தாங்கள் சகோதரர்களைப் போன்றவர்கள் என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காக சிவ்ராஜ்குமாரை ஒரு நட்புரிமையடன் நோக்கி கமல், " உங்களது மொழி (கன்னடம்) தமிழில் இருந்து பிறந்தது. அதனால் நீங்களும் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே" என்று கூறினார்.துரதிர்ஷ்டவசமாக, அந்த கருத்தை கமல் கூறிய பின்னணியைக் கருத்தில் எடுக்காமல் சிலர் அவருக்கு மொழிக்கர்வமும் கன்னட மொழி பேசுபவர்களின் உணர்வுகளை மதிக்காத குணமும் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்கள்.
திராவிட மொழிகள்
கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதன் மூலம் கமல் பலர் காலடி வைக்க அஞ்சிய பரப்புக்குள் விரைந்து சென்று விட்டார். தமிழும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துலு போன்ற ஏனைய தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிக் குழுவைச் சேர்ந்தவை.
ஆனால், ஏனைய திராவிட மொழிகள் தொடர்பில் தமிழ் மொழியின் அந்தஸ்து பற்றி ஒரு தகராறு இருக்கிறது. தமிழ் மொழியே தாய்மொழி என்றும் ஏனைய திராவிட மொழிகள் " தமிழ்க் கருவறையில் " கருக்கூட்டியவை என்றும் வலியுறுத்திக் கூறுவது பல தமிழர்களின் மனப்பாங்காக இருக்கிறது. மறுபுறத்தில், தமிழ் அல்லாத திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் தங்களது மொழிகள் சகோதரத்துவ மொழிக்குழுவைச் சேர்ந்தவை என்றும் அதில் மூத்த மொழியே தவிர தாய்மொழி இல்லை என்றும் கருதுகிறார்கள்.
பிரபல்யமான தமிழ் ஆய்வாளரும் எழுத்தாளருமான பெருமாள் முருகன் அண்மையில் 'தி இந்து ' பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்த பிரச்சினையை மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார். அதில் பொருத்தமான சில பகுதிகள் வருமாறு ;
ஆதித்திராவிட மொழி
" கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது " என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து பல்வேறு விவாதங்களை மூளவைத்திருக்கிறது. ஆனால், இது ஒன்றும் புதிய கருத்து அல்ல. இது இரு நூற்றாண்டுகளாக தமிழ் உரையாடல்களில் இருந்து வந்திருக்கிறது.
"பொதுவான ஆதித்திராவிட மொழி (Proto -- Dravidian language ) ஒன்றில் இருந்து கிளைவிட்டவையே திராவிட மொழிகள் என்று றொபேர்ட் கால்ட்வெல்லும் மற்றைய மொழியியல் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்த கருத்தை தமிழ்த் தேசியவாதிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகல திராவிட மொழிகளும் தமிழில் இருந்து பிறந்தவையே என்று அவர்களன உரிமை கோரினார்கள். இந்த நம்பிக்கை அதன் உச்சத்தில் தமிழே உலகின் முதலாவது மொழி என்றும் உலகின் ஏனைய மொழிகள் சகலதும் அதிலிருந்து பிறந்தவையே என்றும் பிரகடனம் செய்யப்படுகின்ற அளவுக்கு விரிவடைந்தது.
"இன்றும் கூட தமிழ் அறிவுஜீவிப் பரப்பில் இரு சிந்தனைப் போக்குகள் தொடர்ந்து மேம்பட்டுக் காணப்படுகின்றன. ஆதித்திராவிட மொழி ஒன்று பற்றிய கருத்து தமிழ்நாட்டுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாறாக, தமிழ் சகல மொழிகளினதும் தோற்றுவாய் என்ற கருத்து தமிழ்நாட்டுக்கு வெளியில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
"இந்தியாவின் பன்மொழிப் பின்புலத்தில் மொழி ஆதிக்கத்தைச் சூழ்ந்த விழிப்புநிலை அரசியல் ரீதியாகவே வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தேசியக்குழுவும் அதன் அடையாளத்தின் பிரதான குறியீடாக மொழியையே கருதுகின்றன. அவர்களது மொழியின் பெருமையை சிறுமைப்படுத்துவதாக கருதப்படக்கூடிய எந்தவொரு கருத்து அல்லது நடவடிக்கை ஆவேசமான எதிர்ப்பைக் கிளப்பும்.
"இத்தகைய ஒரு சூழ்நிலையில், பொதுவான ஒரு ஆதித்திராவிட தோற்றுவாயில் (Proto - Dravidian root ) இருந்தே சகல திராவிட மொழிகளும் தோன்றின என்ற கருத்தை அழுத்திச் சொல்வதே பொது மேடைகளில் பெருமளவுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த கருத்து கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணக்கப்போக்கையும் சமத்துவத்தையும் வளர்க்கும்.
"மற்றைய மொழிகள் தமிழில் இருந்தே தோன்றின என்று கூறுவதை மற்றையவர்கள் தங்களது மொழியினதும் அடையாளத்தினதும் மதிப்பைக் குறைக்கும் ஒரு செயலாகவே எளிதில் நோக்கக்கூடும். தமிழே தங்களது மொழிகள் எல்லாவற்றினதும் தோற்றுவாய் என்று உரிமை கோருவதை மற்றைய மொழிகளைப் பேசுபவர்கள் தங்கள் மீதான திணிக்கப்படும் ஆதிக்கத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கக்கூடும். தங்களது மூதாதைப் பெருமையை அரசியல் பிரசாரத்துடன் கலக்கும் தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரை, தமிழே மற்றைய மொழிகளின் தோற்றுவாய் என்று கூறுவது புராதன மேன்மைக் கதையாடல் ஒன்றை கட்டமைக்க உதவலாம்.
"ஆனால், அதற்கு அப்பால், சமகால அரசியலில் இந்த கருத்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும். வலிமையான -- பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அறிவுசெறிந்த சான்று இல்லாமல், சகல மொழிகளினதும் தோற்றுவாய் தமிழே என்று அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை."
மக்கள் நீதி மையம்
பெருமாள் முருகனின் இந்த அறிவுக் கூர்மையுடைய வார்த்தைகள் கமல்ஹாசனுக்கு எதிராக பகைமையை மூளவைத்த அவரின் தவறை வெளிக்காட்டுகின்றன. கமல்ஹாசனின் அரசியல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியிருக்கிறது போன்று தெரிகிறது. பிறப்பால் பிராமணனாக இருந்தாலும், அவர் சுயபிரகடனம் செய்துகொண்ட ஒரு நாத்திரும் பகுத்தறிவுவாதியுமாவர். அவர் மக்கள் நீதி மையம் என்ற மதசார்பற்ற ஒரு அரசியல் கட்சியின் தாபகத்தலைவர்.
அந்த கட்சியை அவர் 2018 பெப்ரவரி 21 ஆம் திகதி உத்தியோகபூரவமாக அங்குரார்ப்பணம் செய்தார். 2019 இந்திய பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. சகல வேட்பாளர்களுமே கட்டுப்பணத்தை இழந்து கட்சி மண்கவ்வியது. மக்கள் நீதி மையத்துக்கு அந்த தேர்தலில் மாநிலத்தில் 1,613, 708 (3.7 சதவீதம் ) வாக்குகளே கிடைத்தன.
2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேளையிலும் மக்கள் நீத மையம் படுதோல்வி அடைந்தது.. அதனால் கமல் ஹாசனுக்கு இருந்த பிரமாண்டமான படிமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்த தேர்தலில் ஒருசில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து மாநிலத்தின் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் போட்டியிட்டது. கமல் ஹாசன் தலைமையிலான கூட்டணியினால் ஒரு ஆசனத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மக்கள் நீதி மையத்துக்கு 10, 58,084 ( 2.45 சதவீதம் ) வாக்குகள் வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.
மக்கள் நீதி மையத்தை ஒரு மத்திய போக்குடைய கட்சி என்று கூறிக்கொண்ட போதிலும், தேர்தல் தோல்விகளுக்கு பிறகு கமல் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நெருங்கிப் போனார். தி.மு.க. பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கியமான ஒரு கட்சியாக விளங்குகிறது. தி.மு.க. வினால் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிறகு கமலின் அரசியல் அந்தஸ்து பாரிய உத்வேகத்தைப் பெற்றது.
பாரதிய ஜனதா தலைவர் விஜயேந்திரா
எனவே, கன்னடத்தையும் தமிழையும் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கமல் கூறிய பிறகு பாரதிய ஜனதா பாய்ந்து சந்தர்ப்பத்தை பிடித்துக்கொண்டது. கமல்ஹாசனின் கருத்து " பண்பற்றது" என்றும் கன்னட மொழியையும் அதைப் பேசும் 6 கோடி 50 இலட்சம் மக்களை " அவமதிப்பது " என்றும் கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவரான பி வை. விஜயேந்திரா கண்டனம் செய்ததாக ' தி இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
" கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் திரைப்படங்களில் நடித்த கமல்ஹாசன் தமிழை புகழ்ந்துரைக்கும் பேரில் கன்னடத்தை நிந்தனை செய்து கர்வத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார்" என்று விஜயேந்திரா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். கன்னடத்தில் மொழியியல் தோற்றுவாய் குறித்து பேசுவதற்கு கமலுக்கு இருக்கும் சான்று வலிமையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கும் விஜயேந்திரா " அவர் ஒரு வரலாற்றாசிரியர் இல்லை " என்று கூறியிருக்கிறார்.
மத, கலாசார உணர்வுகளைை கமல்ஹாசன் திரும்பத்திரும்ப புண்படுத்துவதாகவும் குற்ஞ்சாட்டிய பாரதிய ஜனதா தலைவர் " தென்னிந்தியாவில் இணக்கப்போக்கை கொண்டுவருவதற்கு பாடுபட வேண்டியவர் என்று எதிர்பார்க்கப்படும் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களாக இந்து மதத்தையும் மத உணர்வுகளையும் நிந்தனை செய்து வருகிறார். இப்போது அவர் 6கோடி 50 இலட்சம் கன்னடர்களின் சுயமரியாதையை புண்படுத்தியதன் மூலமாக கன்னட மொழியை அவமதித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மன்னிப்பு கேட்குமாறு கோரிக்கை
பாரதிய ஜனதாவின் தாக்குதலை தொடர்ந்து பல கன்னட ஆதரவுக் குழுக்களும் அமைப்புக்களும் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கின. கர்நாடகா றக்சண வேதிகாவின் செயற்பாட்டாளர்கள் பெங்களூரில் ' தக் லைவ் ' திரைப்படத்தின் சுவரொட்டிகளை கிழித்தெறிந்து குழப்பம் செய்தனர். கர்நாடகா மாநிலம் பூராவும் அந்த திரைப்படத்துக்கு தடைவிதிக்கப்போவதாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
எதிர்பாராத ஒரு நடவடிக்கையாக, கர்நாடகா திரைப்பட வர்த்தக சம்மேளனம் மாநிலத்தில் தக்லைவ் திரையிடப்பட வேண்டும் என்று கமல் விரும்பினால் கன்னட மொழி பேசுபவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது.கர்நாடகாவின் முன்னாள் பாரதிய ஜனதா முதலமைச்சர் எடியூரப்பாவும் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவும் கமலைக் கண்டனம் செய்து அறிக்கைளை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால், கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்பதற்கு மறுத்துவிட்டார். தனது கருத்து கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல என்றும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் பகிரங்கமாக விளக்கம் அளித்திருக்கிறார். அன்பைச் சொரிவதற்கு மாத்திரமே தான் முயற்சித்ததாகவும் அன்புக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியாருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் தனது படத்தை திரையிடுவதற்கு வகை செய்வதற்காக கமல்ஹாசன் அதன் கூட்டு தயாரிப்பாளர் என்ற வகையில் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் , நீதிமன்றம் மன்னிப்புக் கேட்குமாறு கமலுக்குை " ஆலோசனை " கூறியது. தவறு செய்திருந்தால் மாத்திரமே தன்னால் மன்னிப்புக் கேட்கமுடியும் என்றும் இந்த விடயத்தில் தான் தவறு எதையும் செய்யவில்லை என்றும் கூறி கமல் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். தக் லைவ் கர்நாடகா மாநிலத்தில் திரையிடப்படவில்லை.
படத்தின் தோல்வியால் அதிர்ச்சி
கமல்ஹாசனின் இந்த கவலைக்கு மேலதிகமாக இன்னொரு அதிர்ச்சியும் வந்து சேர்ந்தது. வசூலில் பிரமாண்டமான சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தக் லைவ் தியேட்டர்களில் பெரிதாக ஓடவில்லை. முதல் ஆறு நாட்களிலும் திரைப்படத்தின் உலகளாவிய தியேட்டர் வசூல் 100 மில்லியன் இந்திய ரூபா மாத்திரமேயாகும். அந்த படம் 3000 மில்லியன் இந்தியா ரூபா செலவில் தயாரிக்கப்பட்டது.
படம் பெரிதாக ஓடாததற்கு கன்னட சர்ச்சை காரணமல்ல. தமிழ்நாட்டு தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக என்ன காரணத்துக்காக ஓடவில்லை என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு படம் சிறப்பானதாக அமையவில்லை என்பது ஒரு விளக்கமாக இருக்கிறது.
திரைப்படத்தையும் கமல்ஹாசனையும் இயக்குநர் மணிரத்தினத்தையும் பழிதூற்றி சமூக ஊடகங்களில் செய்யப்பட்டுவரும் பிரசாரங்கள் இன்னொரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரசாரங்கள் கமல் தி.மு.க.வுடனும் காங்கிரஸுடனும் அணிசேர்ந்து நிற்பதன் காரணமாக அரசியல் நோக்கமுடையவையாக இருக்கின்றன என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இது கமல்ஹாசனுக்கு ஒரு சோதனையான காலம் என்பதில் சந்தேகமில்லை. இந்திய சினிமாவுக்கு மாபெரும் பங்களிப்பைச் செய்த ஒரு மூத்த கலைஞர் இத்தகைய சோதனைக்கு உள்ளாக வேண்டியிருப்பது உண்மையில் கவலைக்குரியதாகும். கன்னட மொழிக்கு எதிராக கமல் கூறியதாகச் சொல்லப்படும் கருத்து காரணமாக அவரது படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துவது பொருளாதார மிரட்டலுக்கு சமமானதாகும். இத்தகைய சூழ்நிலையில் கமல்ஹாசனையும் அவரது திரையுலக வாழ்க்கையையும் சுருக்கமாக ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும்.
களத்தூர் கண்ணம்மா
சிறீனிவாசன் பார்த்தசாரதி கமல் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் 1954 நவம்பர் 7 ஆம் திகதி பிறந்தார். நான்கு பிள்ளைகளில் அவர் இளையவர். அவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர், தாயார் குடும்பப் பெண்மணி. கமல் முதன்முதலாக 1960 ஆம் ஆண்டில் தனது ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். அன்று சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக இந்திய ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தை அவர் வென்றார். குழந்தை நட்சத்திரமாக வேறு சில படங்களிலும் அவர் டித்தார். அவற்றில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோரின் படங்களும் அடங்கும். அதற்கு பிறகு சில வருடங்கள் கமல் படங்களில் நடிக்கவில்லை.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து மேல்நிலை இரண்டாம் தர பாடசாலையில் கல்வி கற்ற கமல் இரண்டாம் நிலை கல்வித் தராதரத்தை (எஸ்.எஸ். எல்.சி.) நிறைவு செய்யாமலேயே கல்வியை நிறுத்திக் கொண்டார். படித்தவர்களான அவரின் பெற்றோர் பாரம்பரியமான கற்கைநெறிகளை தொடருமாறு அவரை நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக கலைத்துறையில் ஈடுபடுவதற்கு அனுமதித்தனர்.
நாடகத்துறையில் ஈடுபட்ட கமல் நடனத்தையும் கற்றுக்கொண்டார். பிரபலமான நாடக விற்பன்னரான ரி.கே. சண்முகத்தினால் இயக்கப்பட்ட ரி.கே. எஸ்.நாடகக்குழுவில் ஒரு பயிலுனராக இணைந்து கொண்ட கமல் நடனக் கலைஞரான தங்கப்பனிடம் நடனத்தைப் பயின்றார்.
கமல் 1970 ஆம் ஆண்டில் தனது 16 வது வயதில் மீண்டும் சினிமாவில் பிரவேசித்தார். மாணவன் என்ற திரைப்படத்தில் இன்னொரு முன்னாள் குழந்தை நட்சத்திரமான ' குட்டி ' பத்மினியுடன் பாடல் காட்சியில் (விசிலடிச்சான் குஞ்சுகளா) அவர் நடித்தார். சினிமா உலகில் சகல துறைகளிலும் ஈடுபாட்டைக் காட்டத் தொடங்கிய அவர் இயக்குநர்களுக்கு உதவியாளராக, திரைக்கதை எழுதுபவராக, படப்பிடிப்பாளராக, நடனப் பயிற்றுவிப்பாளராக வெவ்வேறு பிரிவுகளில் தனது ஆற்றல்களை முயற்சித்துப் பார்த்தார். தொடக்கத்தில் கமல் திரைப்பட இயக்குநராகவே வர விரும்பிய போதிலும், அவரது குருவான கே. பாலச்சந்தர் அதை ஊக்குவிக்கவில்லை. கமல் ஒரு நடிகராக வருவதையே பிரபல்யமான திரைப்பட இயக்குநரான பாலச்சந்தர் விரும்பினார்.
நடிப்பு தொடக்கம்
குறத்தி மகன், அரங்கேற்றம் போன்ற படங்களில் சிறிய பாத்திரங்களை ஏற்று கமல் நடிப்பைத் தொடங்கினார். சொல்லத்தான் நினைக்கிறேன், வெள்ளிக்கிழமை விரதம் போன்ற படங்களில் அவர் வில்லன் வேடத்திலும் நடித்தார். 1975 ஆம் ஆண்டில் பட்டாம்பூச்சி படத்தில் கதாநாயகனாக முதலில் நடித்த அவர் சினிமா பைத்தியம் படத்திலும் அவ்வாறு தொடர்ந்தார். இவற்றைத் தொடர்ந்து இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் மூன்று சிறந்த திரைப்படக்களில் பிரதான பாத்திரங்களில் அவர் நடித்தார்.
அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு ஆகியவையே அந்த படங்கள்.பிறகு இன்னொரு சிறந்த இயக்குநரான பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் நடித்து கமல் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்.
மேற்கூறப்பட்ட திரைப்படங்கள் கமல் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்த உதவிய அதேவேளை, வசூல் சாதனை படைத்த சில படங்களிலும் அவர் நடித்தார். சகலகலா வல்லவன், குரு, கல்யாணராமன், தூங்காதே தம்பி தூங்காதே, இந்திரன் சந்திரன், வாழ்வே மாயம் எல்லாம் வர்த்தக ரீதியில் மகத்தான வெற்றிப் படங்கள்.
வித்தியாசமான திரைப்படங்கள்
சிறந்த கலைஞராகவும் வர்த்தக ரீதியில் வெற்றிகரமான நடிகராகவும் புகழ்பெற்ற பிறகு கமல்ஹாசன் தேனாலி, பஞ்சதந்திரம் போன்ற வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும் படங்கள் தொடங்கம் வேட்டையாடு விளையாடு மற்றும் விஸ்வரூபம் போன்ற மயிர்க்கூச்செறியும் மர்மப் படங்கள் வரை ஒரு வித்தியாசமான முறையிலான தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மாறினார். தேவர்மகன், நாயகன் போன்ற உன்னதமான படங்களிலும் அவர் நடித்தார். நாயகன் படம் "ரைம் " சஞ்சிகையினால் 100 சிறந்த படங்களின் பட்டியலில் ஒன்றாக மதிப்பிடப்ட்டது.
ஒரு படத்தில் பெண்ணாகவும் (அவ்வை சண்முகி) நடித்ததுடன் கதைவசனம் இல்லாத ஊமைப்படத்தையும் ( பேசும்படம் ) தயாரித்து கமல் அவ்வப்போது சில பரீட்சார்த்தங்களையும் செய்தார். குணா மற்றும் ஆளவந்தான் போன்ற பஞங்களில் மனநோயினால் பாதிக்கப்பட்டவராக சவால் மிக்க பாத்திரங்களிலும் அவர் நடித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடங்களில் ( குள்ளனாக ஒரு வேடம்) நடித்து அவர் பெரும் பாராட்டுகளைப் பெற்றார். கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படமே அவரின் பெரும் கலைப்படைப்பாக அமைந்தது. சிவாஜி கணேசன் ஒன்பது வேடக்களில் நடித்த நவராத்திரியையும் விஞ்சியதாக அது நோக்கப்பட்டது.
ரொம் குரூஸுடன் ஒப்பீடு
கமலின் சில படங்கள் வசூலில் சாதனை படைத்த அதேவேளை, வேறுசில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமானவையாக அமையவில்லை. ஆனால், அவர் இந்தியாவின மிகவும் சிறந்த -- பிரபல்யமான நடிகர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.ஹொலிவூட்டின் ரொம் குரூஸுடன் கமல்ஹாசன் அடிக்கடி ஒப்பிடப்பட்டு வந்திருக்கிறார் என்ற போதிலும் அவரின் நடிப்பாற்றல் ரொம் குரூஸின் ஆற்றைலை விடவும் எவ்வளவோ மேலானது.
கமல்ஹாசன் தமிழ்ப்படங்களில் மாத்திரம் நடிக்கவில்லை. இந்தி, மலையாளம், தெலுங்கு, வங்காளம் மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் அவர் நடித்தார் என்ற போதிலும், தமிழ் சினிமாவின் கதாநாயகனாகவே அவர் முத்திரையைப் பதித்தார்.
முக்கியமான சில பின்னணிப்பாடகர்கள் கமலுக்கு பல படங்களில் குரல் கொடுத்திருந்தாலும், அவரும் தனது சொந்தக் குரலில் பல படங்களில் பாடியிருக்கிறார். திரைப்படங்களை இயக்குதல், தயாரித்தல், திரைக்கதை வசனம் எழுதுதல் பாடல்களுக்கு இசையமைத்தல் என்பவற்றுக்கு புறம்பாக தனது நடனங்கள் பலவற்றையும் அவர் வடிவமைத்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதைவசனகர்த்தா பாடகர் மற்றும் நடனக்கலைஞர் என்று பல்வேறு பரிமாணங்களில் சுமார் 300 திரைப்படங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
விருதுகளும் பாராட்டுக்களும்
எழுபது வயதான கமல்ஹாசன் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டம் நீடித்த தனது சினிமா வாழ்வில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். மூன்று திரைப்படங்களில் ( பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம்பிறை, மணிரத்தினம் இயக்கிய நாயகன், சங்கர் இயக்கிய இந்தியன் ) சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது அவற்றில் முதன்மையானது. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரேயொரு நடிகர் கமல்ஹாசன் மாத்திரமே.
புகழ்பெற்ற சினிமா சஞ்சிகையான பிலிம்பெயாரினால் வழங்கப்படும் விருதை பல தடவைகள் அவர் பெற்றார். 19 தடவைகள் பிலிம்பெயார் விருதைப் பெற்ற அவர் 12க்கும் கூடுதலான தடவைகள் அந்த விருதுக்காக நியமிக்கப்பட்டார். மேலும் பல தடவைகள் அவருக்கு பிலிம்பெயார் விருதுகள் கிடைத்திருக்கும். ஆனால், அவர் தன்னை அதற்கு மேலும் விருதுக்காக நியமிக்க வேண்டாம் என்று பிலிம்பெயாருக்கு கடிதம் எழுதி கேட்டுக் கொண்டார்.
கமலின் ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் கலை மற்றும் விஞ்ஞான அகாடமியினால் (US academy of motion picture arts and sciences) வருடாந்தம் நடத்தப்படும் ஆஸ்கார் விருதுகளுக்காக இந்தியாவின் உத்தியோகபூர்வ நியமனங்களாக அனுப்பப்பட்டன. எந்த படமுமே ஆஸ்கார் விருதைப் பெறவில்லை என்ற போதிலும், அந்த விருதுக்காக நியமிக்கப்பட்ட கூடுதல் எண்ணிக்கையான படங்களில் நடித்த இந்திய நடிகர் கமல்ஹாசனேயாவார்.
தமிழ்நாடு மாநில அரசாங்கத்தினால் வழங்கப்படும் கலைமாமணி விருதை பெற்ற அவர் இந்திய மத்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றார். பிரெஞ்சு அரசாங்கம் அவருக்கு செவாலியர் விருது வழங்கிக் கௌரவித்தது.
கமல்ஹாசன் 1978 ஆம் ஆண்டில் நடிகையும் நாட்டியக் கலைஞருமான வாணி கணபதியை முதலில் திருமணம் செய்தார். அவர்கள் 1982 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர். அதற்கு பிறகு நடிகை சரிகாவுடன் சில வருடங்கள் கூடிவாழ்ந்தார். அந்த காலப்பகுதியில் மூத்தமகள் சுருதி 1986 ஆம் ஆண்டில் பிறந்தார். சரிகாவும் கமல்ஹாசனும் 1990 ஆம் ஆண்டில் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது இரண்டாவது மகள் அக்சரா 1991 ஆம் ஆண்டில் பிறந்தார். மகள்மார் இருவரும் இப்போது திரைப்படங்களில் நடிக்கின்றனர்.
2002 ஆம் ஆண்டில் சரிகாவிடமிருந்து பிரிந்த கமல்ஹாசன் 2004 ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்றார். பிறகு 2005 ஆம் ஆண்டில் நடிகை கௌதமியுடன் கூடிவாழத் தொடங்கினார். கௌதமிக்கு முன்னைய திருமணத்தின் மூலம் ஒரு மகள் இருக்கிறார். கமலும் கௌதமியும் 2016 ஆம் ஆண்டில் பிரிந்து கொண்டனர். தற்போது கமலுக்கு இரு நடிகைகளுடன் தொடர்புகள் இருப்பதாக சினிமா உலகில் கிசுகிசுக்கப்படுகிறது என்ற போதிலும், அதற்கான உறுதியான சான்று எதுவும் இல்லை.
ராஜ்ய சபா எம்.பி.
கமல் முறைப்படியான கல்வியை பெரிதாக கொண்டிருக்காவிட்டாலும், அவர் மிகுந்த விவேகமுடையவர். நன்கு வாசிக்கும் பழக்கமுடைய அவர் நிறைந்த அறிவுடையவர். பல விவகாரங்களில் பேரார்வம் கொண்ட அவர் அறிவுஞானத்தை தேடுபவர். திரைப்படக் கலைஞர்கள் மத்தியில் சிறந்த ஒரு அறிவுஜீவி என்று கமலைக் கறைமுடியும்.
அரசியலிலும் தமிழ்நாட்டின் நல்வாழ்விலும் ஆர்வத்தைக் காட்டிவரும் கமல்ஹாசன் தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு செல்லும் உறுப்பினராக சிறப்பான முறையில் செயற்பட்டு தன்னை நிரூபிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி virakesari