பலஸ்தீன் ஆதரவு பிரசாரம்! காற்பந்தாட்ட வீரருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

13 ஆனி 2025 வெள்ளி 17:27 | பார்வைகள் : 414
AFC காற்பந்து ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில், தரவரிசையில் முன்னிலையில் இருந்த சீன(China) தாய்பே அணியை 3–1 என்ற கணக்கில் தோற்கடித்து இலங்கை அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது.
கடந்த 10ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மிக முக்கியமான AFC ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.
சீன தாய்பே அணிக்கு எதிராக 3-1 என வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை மட்டுமே, தென்னாசிய பிராந்தியத்திலேயே ஒரே வெற்றியடைந்த நாடாக உள்ளது.
இந்தநிலையில்,சீன தாய்பே அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இலங்கை அணியின் மாற்றுப் பங்கேற்பாளர் முகம்மட் நிஹாம் “PRAY FOR FREE PALESTINE” என எழுதப்பட்ட ஜெர்சி அணிந்திருந்தார்.
இந்தவிடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதைப் பற்றி இலங்கை கால்பந்துச் சம்மேளனத்தின் தலைவரான ஜஸ்வர் உமர் கூறுகையில்,
"இது சம்மேளனத்தின் அனுமதியின்றி நடைபெற்ற செயல். இது தேவையற்றதுடன், உலக கால்பந்து ஒழுங்கு விதிகளுக்கும் புறம்பானது. அந்த வீரர் திறமையானவர் ஆனால் அனுபவமற்றவர்.
இருப்பினும் இதற்காக மன்னிக்க முடியாது. இந்தச் செயலுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார். FIFA விதிகள் படி, போட்டிகளின் போது அரசியல், மத அல்லது சமூக செய்திகளை உடைகள், பேனர்கள் மூலம் வெளிப்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இது ஆட்ட நெறிமுறைகளின் மீறலாக கருதப்படும். “PRAY FOR FREE PALESTINE” போன்ற எழுத்துகள் கொண்ட சிறப்பு ஜெர்சிகள் அல்லது டி-ஷர்ட்கள் அணிவது, அணியின் அனுமதியின்றி அல்லது FIFA அங்கீகாரம் இல்லாமல் செய்தால், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுவார்கள்.
அல்லது போட்டியிலிருந்து இடைநிறுத்தப்படும் வாய்ப்பு, அணிக்கு அபராதம், வீரருக்கு தடை அல்லது பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.