265 பேரை பலி கொண்ட விமான விபத்து; உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு

14 ஆனி 2025 சனி 05:47 | பார்வைகள் : 210
குஜராத்தில் 265 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி மதியம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 - 8 டிரீம் லைனர் விமானம், கிளம்பிய 30 வினாடிகளில், மருத்துவ கல்லூரியின் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணமாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 265 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க, உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது.
இந்த குழுவானது விபத்துக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்துக்களை தடுக்கவும், திறம்பட நிர்வகிக்கவும் ஒரு உறுதியான கட்டமைப்பை பரிந்துரைப்பதே இந்தக் குழுவின் முதன்மை நோக்கம் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.