விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்

15 ஆனி 2025 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 195
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் தலா, 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்' என, 'ஏர் இந்தியா' நிறுவனம் அறிவித்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, டாடா குழுமம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இறந்தவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண் இயக்குநருமான கேம்பல் வில்சன் நேற்று கூறியதாவது:
எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இது டாடா நிறுவனம் வழங்குவதாக கூறிய 1 கோடி ரூபாயுடன் சேர்த்து வழங்கப்படும்.
இந்த விபத்தில் சொந்தங்களை இழந்த குடும்பத்தினருக்கு ஏர் இந்தியா நிறுவனம் எப்போதும் உறுதுணையாக நிற்கும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம்.
இழப்பீட்டுடன் காயமடைந்த அனைவரின் மருத்துவ செலவுகளையும் ஏர் இந்தியா ஏற்கும். மீட்புப் பணியில் உதவ 100 பராமரிப்பாளர்கள் மற்றும் 40 பொறியாளர்கள் ஆமதாபாத் விரைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இழப்பீடு தர வலியுறுத்தல்
ஏர் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமானடாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனுக்கு, இந்திய மருத்துவ சங்கம் எழுதியுள்ள கடிதம்:இறந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் டாடா சன்ஸ் குழுமத்துடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறோம். விபத்தில் இறந்தவர்களுக்கு ஏற்கனவே 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. அதேசமயம், இந்த கோர விபத்தில் உயிரிழந்த பி.ஜே.மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த டாக்டர்கள் மற்றும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உங்கள் நிறுவனம் இழப்பீடு வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும். அவர்களின் மருத்துவச் செலவுகளையும் ஏற்றால் பேருதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.