தம்பதி இடையே நெருக்கம் குறைய 7 காரணங்கள்...

15 ஆனி 2025 ஞாயிறு 19:57 | பார்வைகள் : 194
தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. 'ரொமான்ஸ்' என்பதே இல்லாமல் போய்விடுகிறது.
பேச்சுவார்த்தை இல்லாமை
தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது.
தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.
மன அழுத்தம், அவசரம்
வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
அலுப்பூட்டும்
'வழக்கம்' திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும்.
திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
கவனிக்கப்படாதது
திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவரது முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் அவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும். ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் பிரதானம். வாழ்க்கைத்துணை மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மனந்திறந்து பாராட்டுவதும் மிகவும் மு
எதிர்மறை நடத்தை
எதிர்மறை நடத்தை ஒரு திருமண உறவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.
தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் காணாமல் போகும். ஒருவருக்கொருவர் நேர்மறையான அணுகுமுறையும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும்.
உடல்ரீதியான நெருக்கமின்மை
திருமணத்தில் தாம்பத்திய உறவு மட்டுமல்ல, சின்னச் சின்ன தொடுதலும், உடல் நெருக்கமும் முக்கியம்.
காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுபோன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம்.
துணைவர்கள் ஒருவரையொருவர் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் நிறுத்தினால், அந்த உறவில் இருந்து அன்னியோன்னியம் ஆவியாகிப்போகும்.
விரக்தி, வெறுப்பு
திருமண உறவிலேயே மிகவும் மோசமான நிலை, தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணருவது.
கடந்த கால அனுபவங்களில் உண்டான வெறுப்புகளையும் கோபத்தையும் மனதில் சுமப்பது, ஒரு திருமண உறவை நஞ்சாக்கி விடும்.
தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது.
காரணம், ஒவ்வொரு தம்பதியரின் தேவைகள், விருப்பங்கள், பிரச்சனைகள் வேறுபட்டவை. மனப்பூர்வமான செயல்பாட்டின் மூலம், தம்பதிகள் தங்கள் வாழ்வை அன்புப் பூஞ்சோலை ஆக்கிக்கொள்ள முடியும்.