அடுத்த சில மணிநேரங்களில் அமைதி மீண்டும் நிலைநிறுத்தப்படும் - மக்ரோன்!

15 ஆனி 2025 ஞாயிறு 19:22 | பார்வைகள் : 1517
கிரீன்லாந்தில் பயணத்தில் இருந்தபோது, பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எமானுவல் மக்ரோன், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள நிலை தொடர்பாக கருத்து தெரிவித்தார். அவர், 'அடுத்த சில மணிநேரங்களில் அமைதி திரும்பும்' என்றும், ஈரானுடன் அணுசக்தி விவகாரம் குறித்த உரையாடல்கள் மீண்டும் தொடங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேல், ஈரானில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகளை மூன்றாவது நாளாகவும் ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. ஈரானும் அதற்கு பதிலளித்து ஏவுகணைகளால் தாக்கியது. இந்த நிலைமையை மையமாகக் கொண்டு 'நமக்கு மிக அவசியமானது, அணுசக்தி திறன்களின் அபாயகரமான வளர்ச்சியைத் தடுப்பது மற்றும் மத்திய கிழக்கில் நிலைமை தீவிரமடைதலை தவிர்ப்பது' என்றும் மக்ரோன் தெரிவித்தார்.
'நான் நேற்று ஈரான் ஜனாதிபதியுடன் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். உரையாடல் விரைவில் தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதே சமயம் நான் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசியும், இதே நோக்கத்தை பகிர்ந்தேன்.' எனவும் மக்ரோன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம், கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று மேக்ரோன் சுட்டிக்காட்டினார்.