Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஹிந்துத்வாவை கையில் எடுத்த மம்தா

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஹிந்துத்வாவை கையில் எடுத்த மம்தா

16 ஆனி 2025 திங்கள் 07:12 | பார்வைகள் : 186


மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு, 10 மாதங்களே உள்ள நிலையில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே, யார் ஹிந்துத்வா என்பது தொடர்பாக, தீவிர சித்தாந்தப் போர் நடக்கிறது.

பா.ஜ.,வின் ஹிந்துத்வா அடையாளத்திற்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், திரிணமுல் காங்கிரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எதிர்பார்ப்பு


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கும் மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்து பணியாற்றி வருகிறார். ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு கடும் சவாலாக மாறியுள்ள எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேற்கு வங்க அரசியலை பொறுத்தவரை, ஹிந்துத்வா, சட்ட விரோத ஊடுருவல் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதவை.

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே, ஹிந்துத்வா தொடர்பாக சித்தாந்தப் போர் நடக்கிறது.

'மம்தா ஆட்சியில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. முஸ்லிம்களின் ஓட்டுகளுக்காக ஹிந்துக்களை அவமதிக்கிறார். ஹிந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்' என, பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எதிர் வரும் தேர்தலில், இதை மையமாக வைத்தே தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.,வின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தாங்களும் ஹிந்துத்வா கட்சி தான் என்ற பாணியில் ஆளும் திரிணமுல் காங்கிரசும் செயல்பட்டு வருகிறது.

ஹிந்துக்களின் ஆழமான மத உணர்வுகளை ஒப்புக்கொண்ட திரிணமுல் காங்., ஹிந்து சின்னங்கள் மற்றும் நடைமுறைகளை அதிகளவில் ஏற்றுக் கொண்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாகவே, முதல்வர் மம்தா பானர்ஜி, ஹிந்து விழாக்களில் அடிக்கடி பங்கேற்கிறார். மேலும், கோவில்களுக்கு சென்று வழிபடுகிறார்.

அது மட்டுமின்றி, ஆண்டுதோறும் தசரா பண்டிகையின் போது துர்கா பூஜையை கொண்டாடுவதையும் அவர் ஊக்குவித்து, நன்கொடையும் வழங்குகிறார்.

இதன் வாயிலாக, மேற்கு வங்க பாரம்பரியத்தின் பாதுகாவலராக திரிணமுல் காங்கிரசை நிலைநிறுத்துவதை அவர் நோக்கமாக வைத்துஉள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் திகா என்ற இடத்தில் ஜெகன்னாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இது தவிர, மேற்கு வங்கத்தின் 23 மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு, திகா ஜெகன்னாதர் கோவிலின், 'மஹா பிரசாதத்தை' வழங்கவும், திரிணமுல் காங்., அரசு முயற்சியை துவக்கி உள்ளது.

சந்தேகமில்லை


இதன் வாயிலாக, ஹிந்து வாக்காளர்களிடையே பா.ஜ.,வின் செல்வாக்கை நேரடியாகக் குறைக்கும் முயற்சியிலும் மம்தா அரசு ஈடுபட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக திரிணமுல் காங்., செயல்படுகிறது என்ற பா.ஜ.,வின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிந்துத்வா அடையாளத்தை முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.

இது, பா.ஜ.,வின் ஹிந்துக்கள் ஓட்டு வங்கியை பாதிக்கும் என்றும் அவர் கணக்கு போடுகிறார்.

இதனால், சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., - பா.ஜ., இடையே ஹிந்துத்வா தொடர்பாக அனல் பறக்கும் பிரசாரம் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை

வர்த்தக‌ விளம்பரங்கள்