அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிரான வலுக்கும் எதிர்ப்பு

16 ஆனி 2025 திங்கள் 11:57 | பார்வைகள் : 327
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம் வலுபெற தொடங்கியுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 6ஆம் திகதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனை கட்டுப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மாகாண அரசின் அனுமதி இல்லாமல் மரைன் படையை நகரில் குவிக்க உத்தரவிட்டார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து ட்ரம்பிற்கு எதிரான முழக்கம் அங்கு வலுபெற்றுள்ளது.
குறிப்பாக, 'அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை' என்ற தலைப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரைன் படையினர் கைது செய்யத் தொடங்கியதால், ட்ரம்ப் மீதான எதிர்ப்பு பல்வேறு மாகாணங்களில் விரிவடையத் தொடங்கியுள்ளது.
டென்வர், சிகாகோ, நியூயார்க், ஆஸ்டின் நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி நடனமாடியும், ட்ரம்ஸ் இசைத்தும் முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதன் எதிரொலி அமெரிக்க இராணுவத்தின் 250வது ஆண்டு விழாவில் பிரதிபலித்தது.
வாஷிங்டனில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற ட்ரம்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அங்கு கூடிய 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் 'ட்ரம்ப் உடனே வெளியேற வேண்டும்' என முழங்கினர்.