Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.,களிடம் விஜய் ஆதரவு தயாரிப்பாளர் ரகசிய பேச்சு

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.,களிடம் விஜய் ஆதரவு தயாரிப்பாளர் ரகசிய பேச்சு

19 ஆனி 2025 வியாழன் 08:58 | பார்வைகள் : 569


த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி., மற்றும் ம.தி.மு.க.,விடம், திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பு பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

'த.வெ.க., கூட்டணிக்கு வருபவர்களுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும்' என, அக்கட்சி தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி பற்றிய விவாதம் துவங்கி இருக்கிறது.

பங்கு வேண்டும்


சமீபத்தில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்' என கூறிச் சென்றுள்ளார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியிலும் அந்த குரல் ஒலிக்கத் துவங்கி உள்ளது. 'தி.மு.க.,விடம் ஆட்சி யில் பங்கு கேட்க வேண்டும்' என, தமிழக காங்கிரசிலும் சிலர், உரத்த குரலில் பேசி வருகின்றனர்.

'கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். கூட்டணி ஆட்சி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க, ஈரோட்டில் வரும் 22ல் பொதுக்குழுவை கூட்டுகிறார் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 'இம்முறை கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம்; அதை வலியுறுத்தி தி.மு.க.,விடம் தொகுதிகளை கேட்போம்' என, தி.மு.க., தலைமைக்கு திடீர் நெருக்கடி கொடுத்து வருகிறது. அதாவது, தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வை தவிர, மற்ற கட்சிகள் எல்லாமே கூட்டணி ஆட்சி கோஷத்தை கையில் எடுத்து, அதை வலியுறுத்தத் துவங்கி உள்ளன.

இந்நிலையில, த.வெ.க.,வின் தேர்தல் பிரிவில் இருக்கும் மாநில நிர்வாகி ஒருவர், மும்பையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து பேசியுள்ளார். துணை முதல்வர் பதவியை காங்கிரசுக்கு தருவது குறித்தும், அமைச்சரவையில் பங்கு குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாக தெரிகிறது. பீஹார் தேர்தல் முடிந்தபின், ராகுலிடம் பேசி முடிவு சொல்வதாக, சோடங்கர் தரப்பில் பதில் சொல்லப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், விஜய் ஆதரவு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் பேச்சு நடத்தியுள்ளார்.

25 சதவீத ஓட்டு


இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில், உளவுத் துறை உயர் அதிகாரி நேரடி பார்வையில் எடுக்கப்பட்டுள்ள சர்வேயில், சட்டசபை தேர்தலில் த.வெ.க., தனித்து போட்டியிட்டால், 25 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தகவலை மையமாக வைத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விஜய் தலைமையில், அக்கட்சிகள் கூட்டணி சேருமானால் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

வர்த்தக‌ விளம்பரங்கள்